பதிவு செய்த நாள்
21 மே2018
00:17
கடன் தகுதியை தீர்மானிப்பதில், ஓர் அம்சமாக விளங்கும், கிரெடிட் ஸ்கோரின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், இது குறித்த விழிப்புணர்வு அவசியம்.
உங்கள் கிரெடிட் ஸ்கோரில் கவனமாக இருக்க வேண்டும் என அடிக்கடி சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் எந்த விஷயத்தையும் செய்யக் கூடாது என்றும் நிதி வல்லுனர்கள் வலியுறுத்தி வருவதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
வங்கிகளில் கடன் பெறுவதில் கிரெடிட் ஸ்கோரும் முக்கிய அம்சமாக இருப்பதே இதற்கு காரணம். குறைவான கிரெடிட் ஸ்கோர் பெற்றிருப்பவர்களுக்கு, வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுவதாக கூறப்படுவதில் இருந்தே, இதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.
கடன் தகுதி:
கிரெடிட் ஸ்கோர், கடன் பெறும் வாய்ப்பை பாதிக்கும் என்பது மட்டும் அல்ல, சிறந்த கிரெடிட் ஸ்கோரை பெற்றிருந்தால் கடன் சலுகையையும் பெறலாம் எனும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஒரு சில வங்கிகள், நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, வட்டி விகிதத்தில் சலுகை அளிக்க முன்வந்துள்ளன. ‘கிரெடிட் இன்பர்மேஷன் பியூரோ’ எனப்படும் கடன் சேவை அமைப்புகள், கிரெடிட் ஸ்கோரை வழங்கி வருகின்றன. ‘டிரான்ஸ் யூனியன் சிபில்’ உள்ளிட்ட அமைப்புகள் இதை வழங்கி வருகின்றன.
ஒருவரின் கடன் பெறும் தகுதியை குறிக்கும் மதிப்பெண்ணாக கிரெடிட் ஸ்கோர் அமைகிறது. கடன் பெறுபவர்கள் அதற்கான தவணைத் தொகையை முறையாக திரும்பச் செலுத்துவதன் அடிப்படையில் இந்த மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. கடன் தவணை மட்டும் அல்லாது, கிரெடிட் கார்டு தொகையை செலுத்துவது, மற்ற கட்டணங்களை முறைப்படி செலுத்துவது உள்ளிட்ட அம்சங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, கிரெடிட் மதிப்பெண் உருவாக்கப்படுகிறது.
மூன்று இலக்க எண்ணாக இது அமைகிறது. பொதுவாக, 300 முதல், 900 வரை இது அமைகிறது. 700 எனும் அளவில் இருப்பது நல்ல கிரெடிட் ஸ்கோராக கருதப்படுகிறது. அதற்கு மேல் இருந்தால் இன்னும் நல்லது. கடன் தகுதியை தீர்மானிப்பதில் கிரெடிட் ஸ்கோரை முக்கியமாக கருதி வந்த வங்கிகள் தற்போது, இதற்காக வாடிக்கையாளர்களுக்கு பரிசளிக்கவும் முன்வந்துள்ளன. அதாவது, முறையாக கடன் தவணையை செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிப்பதோடு, வட்டி விகிதத்திலும் சலுகை அளிக்க பொதுத் துறை வங்கிகள் தீர்மானித்துள்ளன.
வட்டி விகித சலுகை:
பரோடா வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள், சிபில் ஸ்கோர் அதிகம் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தில், 10 அடிப்படை புள்ளிகள் சலுகை அளிக்கின்றன. ஐ.டி.பி.ஐ., வங்கியும் அண்மையில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. முறையாக கடன் தவணைகளை செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு, அதற்கான பலனை அளிப்பது சரியாக இருக்கும் என்பதன் அடிப்படையில் இது அமைகிறது. எனவே, நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளர்கள் எளிதாக கடன் பெறலாம் என்பதோடு, வட்டி விகித சலுகையையும் பெறலாம்.
அதே நேரத்தில், குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். சிபில் உள்ளிட்ட அமைப்புகள், வங்கிகள் மட்டும் அல்லாமல் நிதி நிறுவனங்களிடம் இருந்தும், கடன் தகுதி விபரங்களை பெறத் துவங்கிஉள்ளன. இதனால், கிரெடிட் ஸ்கோர் மேலும் பரவலாகும் வாய்ப்பு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|