பதிவு செய்த நாள்
23 மே2018
00:39
மாநிலத்துக்குள் நடைமுறைப்படுத்த உள்ள ‘இ–வே பில்’ஐ, பொருள்கள் மீது விதிப்பதா அல்லது, சரக்கு மதிப்பின் மீது விதிப்பதா என, தமிழக அரசுடன், வணிகவரி துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலங்களுக்கிடையே, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சரக்குகளை எடுத்துச் செல்ல, ‘ஆன்லைன்’ மூலம் அனுமதி பெறும், ‘இ – வே பில்’, நாடு முழுவதும் ஏப்.,1ல் அமல்படுத்தப்பட்டது. மாநிலத்துக்கு உள்ளேயே, சரக்குகளை எடுத்துச் செல்ல, ‘இ –வே பில்’ பெறும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜூன் முதல் அனைத்து மாநிலங்களிலும், மாநிலத்துக்குள்ளேயும் சரக்குகளை அனுப்ப, இ – வே பில் பெறும் முறை நடைமுறைக்கு வர உள்ளது. தமிழகத்தில், ஜூன், 2ம் தேதி முதல் மாநிலத்துக்குள், இ–வே பில் நடைமுறைக்கு வருகிறது. இதில், பொருளைப் பொறுத்தா அல்லது அதன் மதிப்பை பொறுத்தா இ – வே பில் வழங்குவது என்ற ஆலோசனை நடந்து வருகிறது.
இது குறித்து, வணிக வரி துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலத்துக்குள், எந்தெந்த பொருட்களுக்கு இ – வே பில் விதிக்கலாம் என்பதை, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சில் அதிகாரம் அளித்து உள்ளது. ஏற்கனவே, குஜராத், கர்நாடக, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் மாநிலங்களுக்குள்ளான இ – வே பில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் பொருள்களின் அடிப்படையிலும், சில மாநிலங்களில் சரக்கு மதிப்பின் அடிப்படையிலும் இ – வே பில் பதிவு செய்யப்படுகிறது.
பிற மாநிலத்தில் உள்ள நடைமுறைகள் குறித்து, தமிழக அரசு விசாரித்து வருகிறது. தமிழகத்தில், பல பொருள்களுக்கு இ–வே பில் விதிக்க கூடாது என, கோரிக்கை எழுந்துள்ளது. அதனால், குறிப்பிட்ட பொருள்கள் அல்லது சரக்கு மதிப்பு இவற்றில் எதன் அடிப்படையில் இ – வே பில் பெற வேண்டும் என்பது குறித்து அரசுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|