பதிவு செய்த நாள்
23 மே2018
00:47
புதுடில்லி : ஆயுள் முழுவதும் இலவச அழைப்புகள்; அதிரடி கட்டணக் குறைப்பு; திரும்ப பணம் பெறும், ‘பியூச்சர் போன்’ போன்ற அதிரடி திட்டங்களால், கலக்கி வரும், ‘ஆர்ஜியோ’ நிறுவனம், ஐரோப்பிய சந்தையிலும் கால்பதிக்க உள்ளது.
எஸ்தோனியா என்ற குட்டி நாட்டில் இருந்து, ஐரோப்பிய நாடுகளில், தொலைதொடர்பு சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. ஆர்ஜியோ, எஸ்தோனியாவை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம், அதன் புதுமையான, ‘டிஜிட்டல்’ கொள்கைகள் தான். இந்நாடு, தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, ‘இ – ரெசிடன்சி’ என்ற திட்டத்தில், பிரத்யேகமாக, ‘டிஜிட்டல் அடையாள எண்’ வழங்குகிறது.
இதன் மூலம், ஒரு நிறுவனம், உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எஸ்தோனியா மூலம், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில், குறைந்த செலவில், வர்த்தகம் புரியலாம். சுருக்கமாக சொன்னால், இந்தியாவில் ஒரு நிறுவனம் தயாரிக்கும் பொருள் அல்லது வழங்கும் சேவையை, எஸ்தோனியா மூலம், ஐரோப்பா முழுவதற்கும் அளிக்கலாம்.
இங்கு, வர்த்தக நடைமுறைகள், பணப் பரிவர்த்தனைகள், வரி கணக்கு தாக்கல், ஆவணங்களில், ‘டிஜிட்டல்’ கையொப்ப வசதி உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும், மின்னணு தொழில்நுட்பத்தில் நடைபெறுகின்றன. அதனால், எந்த நாட்டில் இருந்தும், எஸ்தோனியா மூலம், குறைந்த செலவில் வர்த்தகம் புரிவது சாத்தியமாகியுள்ளது.
இதற்காக, பிரத்யேக கணினி ஒருங்கிணைப்பு சேவை, தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை, எஸ்தோனியா ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, இந்நாட்டில் மிகச் சுலபமாகவும், விரைவாகவும் தொழில் துவங்க முடிகிறது. இத்தகைய வசதிகளை பயன்படுத்தி, தன் தொலைதொடர்பு சேவையை, இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்ல, ஆர்ஜியோ முடிவு செய்துள்ளது.
இது குறித்து ரிலையன்ஸ் குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது: மார்ச் மாதம், இந்தியா வந்த எஸ்தோனிய அரசு பிரதிநிதிகள், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியை சந்தித்து பேசினர். இதையடுத்து, எஸ்தோனிய வர்த்தக பிரிவை துவக்க, முதற்கட்டமாக, 12.20 கோடி ரூபாய் ஒதுக்க உள்ளோம்.
இந்த திட்டம் மூலம், உள்நாட்டின் கடுமையான போட்டி, குறைவான லாப வரம்பு போன்றவற்றால் ஏற்படும் இடர்ப்பாடுகளை, ஆர்ஜியோவால் சமாளிக்க முடியும். அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், நிறுவனத்திடம் உள்ளதால், இந்தியாவில் இருந்தபடி, ஐரோப்பாவில் சேவையை விரிவுபடுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேகமான வளர்ச்சி :
வடக்கு ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடு, எஸ்தோனியா. மக்கள் தொகை, 13 லட்சம். 1991ல் சுதந்திர நாடாக மறுபிரகடனம் செய்யப்பட்டது. அது முதல், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. அதனால், ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. வலைதளம் மூலம், 2005ல் பொது தேர்தல் நடத்திய முதல் நாடு; முதன் முறையாக, 2014ல், ‘இ – ரெசிடன்சி’ திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு என்ற சிறப்பும், எஸ்தோனியாவுக்கு உள்ளது. இங்கு, அரசு சேவைகளில், 99 சதவீதத்தை, வலைதளம் மூலம் பெறும் வசதி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|