பதிவு செய்த நாள்
28 மே2018
01:05
சந்தை, சமீபத்தில் எட்டிய உச்சத்தில் இருந்து விழுந்ததை விட, உங்கள் சொந்த பங்கு மதிப்பு அதிகம் சரிந்துள்ளதா? அவற்றின் தொடர் சரிவு ஏன் திடீரென நிகழ்ந்தது? சந்தையின் தொடர் உயர்வு, திடீர் சரிவாக மாறிய காரணம் என்ன?
விடைதேடும் நிலைக்கு முதலீட்டு சமூகம், இப்போது திடீரென தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இது புதிதல்ல. ஒவ்வொரு காளை சந்தையிலும் இதே நிலை, ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தலை எடுக்கும். அது நாம் சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஏற்படும். இம்முறையும் அப்படியே நடந்துள்ளது.
இதில் யாருக்கு என்ன பங்கு?
சந்தை தொடர் எழுச்சி காண்பதும், திடீர் சரிவை சந்திப்பதும் முதலீட்டாளர்களின் நடத்தை சார்ந்ததே. நமக்கு நாமே பொறுப்பு. பிறரை நம் நடத்தைக்கு பொறுப்பாளர் ஆக்குவது, நம்மை மேம்படுத்தாது. மாறாக, நம் முதலீடுகளின் தோல்விக்கே இந்த போக்கு வித்திடும்.இந்த அடிப்படை உண்மையை உணராததால், குழம்பிய மனநிலையில் பல முதலீட்டாளர்கள் இருக்கின்றனர். குறிப்பாக இந்த காளை சந்தையில், புதிதாக முதலீடு செய்ய துவங்கிய பலருக்கு, இந்த சரிவு அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில், சந்தையில் நுழைந்த பலரும், முதலீடுகளில் ஏற்படும் சூழல் மாற்றங்களை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மாறாக, அத்தகைய மாற்றங்கள் ஏற்படாது என்ற நம்பிக்கையில் முதலீடு செய்துள்ளனர்.கச்சா எண்ணெய் விலையோ, வட்டி விகிதமோ, டாலர் மதிப்போ உயரும் என்பதை இவர்கள் அளவிட முயற்சிக்க கூட தவறிவிட்டனர். ஆக, வெறும் பங்கு லாபத்தை மட்டுமே மையமாக வைத்து, எதிர்பார்ப்புகளை வடிவமைத்துக் கொண்டுள்ளனர்.
அடிப்படையில், தவறான எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தும் சூழல்களே இப்படி தோல்வி சார்ந்து அமையும். ஆக, எதிர்பார்ப்புகளை தவறாக ஏற்படுத்திக்கொண்டால், அவற்றின் அடிப்படையில் நாம் எடுக்கும் முதலீட்டு பார்வைகளும் தவறாக அமையும். முதலீட்டு முடிவுகள் தோல்வியைத் தழுவ, தவறான முதலீட்டு பார்வையே அடிப்படைக் காரணம். இப்போது நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது, முதலீட்டு பார்வையை சரியாக அமைக்க முற்படுவதே. மற்றவர்களைப் பார்த்து, நமது முதலீட்டு பார்வையை அமைத்து கொள்வதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை, இப்போது தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் தவறுகள், நமது ஆகாமல் இருக்கும் வகையில், நம் புரிதலை கையாள வேண்டும். இது தற்போதைய அவசிய, அவசர தேவை. தவறு நடந்துள்ளது என்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே, அதை சரி செய்ய தேவையான மன நிலையை அடைய முடியும். இதன் தொடர்ச்சியாக, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கும், விடை தேடும் நிலையில் நாம் இருக்கிறோம்.முதலில், ஏற்கனவே எடுத்த முடிவுகளை, திறந்த மனதுடன் மறுஆய்வு செய்ய வேண்டும். தேர்வில் உள்ள தவறுகளை தெளிவாக ஆராய்ந்து, தேவையான மாற்றங்களைச் செய்ய நாம் முன்வர வேண்டும்.
பழைய முதலீட்டு தேர்வு தவறு என்று புரிந்தால், அவற்றிலிருந்து வெளியேற வேண்டும். நஷ்டத்திற்கு விற்க தயங்கக்கூடாது. புதிய முடிவுகளை கவனமாக தேர்வு செய்து, முதலீடுகளை வாங்க வேண்டும். பழைய தவறுகளை களைவதன் மூலம், புதிய முதலீடுகளுக்கான முதல் நமக்கு கிடைத்துவிடும். சந்தையில் வீழ்ச்சியை சந்திக்கும் போதெல்லாம், அதிலிருந்து உடனடியாக மீண்டு, நம் இலக்கை நோக்கி பயணிக்க பழகவேண்டும். முதலீட்டு தவறுகள் ஏற்படுவது சகஜம். அவை மீண்டும் வராமல் தடுக்க வேண்டும். தொடர விட கூடாது. தவறுகளில் பாடம் பயிலும் நேரம் இது. புதிய வியூகம் அமைத்து வெற்றி காணுங்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|