பதிவு செய்த நாள்
28 மே2018
01:15
வட்டி விகிதம் உயரும் வாய்ப்புள்ள சூழலில், முதலீடுகள் மீதான தாக்கம் மற்றும் முதலீட்டாளர்களுக்கான உத்திகள் பற்றி ஒரு அலசல்.
பொருளாதார காரணிகள், வட்டி விகிதம் உயரும் சூழலை உணர்த்துவதாக கருதப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை போக்கும் ஏறுமுகத்தில் இருப்பது, இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இதன் காரணமாக, பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, வரும் மாதங்களில் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வட்டி விகிதம், 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது.
வட்டி விகித மாற்றத்திற்கான முக்கிய காரணியாக அமையும், அரசு பத்திரங்கள் தரும் பலனும் உயரத் துவங்கி இருக்கிறது. 10 ஆண்டு அரசு பத்திரங்கள் தரும் பலம், 2017ம் ஆண்டு மே மாதத்தில், 6.6 சதவீதமாக இருந்தது, இந்த ஆண்டு மே மாதம், 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 8 சதவீதத்தை கடந்து செல்லலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உயரும் வட்டி விகிதம், முதலீடுகள் பலன் மீது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிவது அவசியம்.
ரிஸ்கில் மாற்றம்:
வட்டி விகிதம் உயரும் சூழல், முதலீட்டாளர்கள் அணுகுமுறையிலும் மாற்றத்தை கொண்டு வருவதாக அமைகிறது. வட்டி விகிதம் உயரும் போது, ரிஸ்க் குறைந்த முதலீடுகள் தரும் பலன் அதிகரிக்கிறது. இதன் பயனாக முதலீட்டாளர்கள், ரிஸ்க் மிகுந்த சம பங்குகள் முதலீட்டை நாடுவதை விட, அதிக பலன் தரக்கூடிய நிலையான வருமானம் தரும் முதலீடுகளை நாடுகின்றனர். அவர்கள் முதலில் ரிஸ்கை தவிர்க்க விரும்புகின்றனர்.
முதலீட்டாளர்கள், ஏற்ற, இறக்கம் குறைவான முதலீடுகளை நாடுவதால், சம பங்கு சார்ந்த முதலீடுகளில் இருந்து, நிலையான வருமானம் தரும் முதலீடுகளுக்கு அதிக அளவில் முதலீடு பாய வாய்ப்பு உள்ளது. வட்டி விகிதம், 8 சதவீதத்தை நோக்கி உயரும் சூழலில், நிரந்தர வைப்பு நிதி, பத்திரங்கள் போன்ற முதலீட்டு வாய்ப்புகளை முதலீட்டாளர்கள் அதிகம் நாடும் வாய்ப்பு உள்ளது. வட்டி விகித உயர்வு, பங்குச் சந்தையின் போக்கிலும் தாக்கம் செலுத்தும். மேலும், கச்சா எண்ணெய் விலை போக்கு, பொதுத் துறை வங்கிகளின் ஆரோக்கியம் ஆகியவை சந்தை போக்கில் தாக்கம் செலுத்தலாம்.
சம பங்கு முதலீடு:
இதன் காரணமாக, பங்குகள் தரும் பலன் குறையலாம். இது, சம பங்கு சார்ந்த முதலீட்டின் மீது தாக்கம் செலுத்தும். இதே போலவே, கடன்சார் நிதிகளின் பலனும் தாக்கத்திற்கு உள்ளாகும். பொதுவாக, வட்டி விகிதம் உயரும் போது தற்போதைய பத்திரங்களின் விலை குறையும். இது, நிதிகளின் நிகர சொத்து மதிப்பை குறைக்கும். எனவே, கடன்சார் முதலீடுகள் குறுகிய கால முதலீடுகளை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும் என, வல்லுனர்கள் கருதுகின்றனர்.
நிரந்தர வைப்பு நிதிகளை பொறுத்தவரை, வட்டி விகித உயர்வு நல்ல செய்தியாகும். ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம், வங்கிகளின் பணமாக்கும் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப, நிரந்தர வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் உயரும் வாய்ப்புள்ளது. அதிக பலன் தரக்கூடிய, வர்த்தக நிறுவனங்களின் பங்குகளாக மாற்ற முடியாத பத்திரங்கள் வெளியீடும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மிதமான ரிஸ்கை நாடுபவர்களுக்கு, இவை ஏற்றதாக இருக்கும். பி.பி.எப்., உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும் உயரும் வாய்ப்புள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|