பதிவு செய்த நாள்
29 மே2018
03:45
நியூயார்க் : ‘‘இந்திய, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், அடுத்த, 10 ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சியுடன், உலகத் தரத்திற்கு மாறும்,’’ என, ‘நாஸ்காம்’ அமைப்பின் தலைவர், ரிஷத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது: வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மிகுந்த நம்பிக்கை அளிக்கக் கூடியவையாக உள்ளன. நாட்டில் தற்போது, 5,000க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.
இது, 8- – 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயரும். அவற்றில் பல நிறுவனங்கள், உலகத் தரத்துடன் செயல்பட்டு, மிகச் சிறந்த சேவைகளை வழங்கும். இதனால், சர்வதேச தரத்தில் வேலைவாய்ப்புகள் உருவாகும். உயர் மதிப்புடன் கூடிய அங்கீகாரமும் நிறுவனங்களுக்கு கிடைக்கும். இதன் மூலம், ‘பிராண்டு இந்தியா’ என்ற தோற்றத்தை, இந்நிறுவனங்கள் உருவாக்கித் தரும்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகள் துறை, 2020ல், இலக்கு அளவான, 20 ஆயிரம் – -25 ஆயிரம் கோடி டாலரை எட்டும். இது, 2025ல், 35 ஆயிரம் கோடி டாலரை தொடவும் வாய்ப்பு உள்ளது. அடுத்த, 7 -– 8 ஆண்டு களில், இத்துறை, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும்.
வல்லுனர்கள் தேவை:
இந்தியா, மிகப் பெரிய அளவிற்கு, தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்கும் நாடாக விளங்குகிறது.ஓராண்டில், சராசரியாக, 10 லட்சம் பொறியாளர்கள் உருவாகின்றனர். அவர்களில், ஐந்து லட்சம் பேர், பல்வேறு வேலைகளில் அமர்ந்தால் கூட, எஞ்சியோருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து ஊக்குவித்தால், வல்லுனர்கள் வளமுள்ள நாடாக, இந்தியா உருவெடுக்கும்.
உலகளவில், அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும், ‘டிஜிட்டல்’ எனப்படும் மின்னணு மயமாக மாறி வருகின்றன. இது, தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களுக்கு சிறப்பான வர்த்தக வாய்ப்பை அளித்துள்ளது. இதை, இந்திய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு, நிறுவனங்கள், அவற்றின் தகுதியை வளர்த்துக் கொள்வது அவசியம்.
அனைத்து நிறுவனங்களும், பணியாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்க வேண்டும். ஏற்கனவே உள்ள வல்லுனர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். ‘செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின்’ போன்ற தொழில்நுட்பங்களை, எந்த அளவிற்கு வர்த்தகத்தில் பயன்படுத்து கிறோம் என்பது தான், வருங்கால வளர்ச்சியை தீர்மானிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முதலிடத்தில் பெங்களூரு:
இந்தியாவில், தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ள நகரங்களில், பெங்களூரு, 26 சதவீதத்துடன், முதலிடத்தில் உள்ளது. இங்கு, ‘பிளிப்கார்ட், ஓலா, குய்க்ஆர்’ உட்பட, ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. அடுத்து, டில்லி மற்றும் தலைநகர் பிராந்தியம், 23 சதவீதம்; மும்பை, 17 சதவீதம்; ஐதராபாத், 8 சதவீதம் என்ற அளவில், பங்களிப்பை வைத்துள்ளன.சென்னை, புனே நகரங்களில், தலா, 6 சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|