பதிவு செய்த நாள்
02 ஜூன்2018
00:24
‘தமிழகத்துக்குள், ஒரு லட்சம் ரூபாய் வரை மதிப்பு கொண்ட பொருட்களை கொண்டு செல்ல, ‘இ – வே’ பில் பெற வேண்டாம்’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களுக்கிடையே, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரக்குகளை எடுத்துச் செல்ல, ‘ஆன்லைன்’ மூலம் அனுமதி பெறும், இ – வே பில் முறை, நாடு முழுவதும் ஏப்ரல், 1ல் அமல்படுத்தப்பட்டது.மாநிலத்துக்கு உள்ளே, சரக்குகளை எடுத்துச் செல்ல, இ – வே பில் பெறும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இம்மாதம் முதல், அனைத்து மாநிலங்களிலும், இந்த முறை நடைமுறைக்கு வர உள்ளது.தமிழகத்தில் இன்று முதல், இ – வே பில் நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில், 100 பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்துக்குள் சரக்குகளை கொண்டு செல்ல, இ – வே பில் பெறும் முறை, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது; இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பில், விவசாயம் தொடர்பான பொருட்கள், மின்சாரப் பயன்பாடு இல்லாத அலுமினிய பாத்திரங்கள், அப்பளம் வகைகள்;மேலும், பவானி ஜமுக்காளம், ரஸ்க், பன், மெழுகு வர்த்தி, சிப்ஸ் வகைகள், தேங்காய் நார், மோட்டார் இல்லாத சைக்கிள் ரிக் ஷா, சேலை, பாசிகள், சித்த மருந்துகள், தமிழ் தினசரி காலண்டர்கள் உட்பட, 100 பொருட்களுக்கு, இ – வே பில் பெற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருப்பூரில் மகிழ்ச்சி
-மாநிலத்துக்குள் சரக்கு போக்குவரத்துக்கு, இ – வே பில் பெறுவதிலிருந்து விலக்கு அளித்துள்ளதால், திருப்பூர் பகுதி, ‘ஜாப் ஒர்க்’ துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூரில், ‘நிட்டிங், டையிங், காம்பாக்டிங், எம்ப்ராய்டரிங், பிரின்டிங்’ என, பல்வேறு வகை ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. ஆடை உற்பத்தி முழுமை பெறுவதற்கு, பல்வேறு ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய நிலை உள்ளது.
ஒவ்வொரு நகர்வுக்கும் இ – வே பில் பயன்படுத்துவது, மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, ‘ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என, திருப்பூர் தொழில் துறையினர், தமிழக அரசிடம் முறையிட்டனர்.இந்நிலையில், ‘ஜாப் ஒர்க் நிறுவனங்கள், தமிழகத்துக்குள் மட்டும் இ – வே பில் பயன்படுத்த தேவையில்லை’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலர் விஜயகுமார் கூறுகையில், ‘‘ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும், இ – வே பில்லில் விலக்கு அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அதுபோல், இ – வே பில் பயன்படுத்துவதற்கான சரக்கின் உச்ச வரம்பு தொகை ஒரு லட்சமாக உயர்த்தியிருப்பது, சிறு, குறு நிறுவனங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. கைத்தறி, விசைத்தறி துணி, ஆடைகளுக்கும் விலக்கு அளித்திருப்பதால், இது மகிழ்ச்சியான செய்தி,’’ என்றார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|