பதிவு செய்த நாள்
02 ஜூன்2018
00:27
புதுடில்லி:‘ஏர் – இந்தியா’ நிறுவனத்தை விற்பனை செய்ய, மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, முத்தான ஐந்து யோசனைகளை, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளார்.பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் – இந்தியா நிறுவனம், 56 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது. அதனால், இந்நிறுவனத்தின், 76 சதவீத பங்குகளை விற்க, மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்கான ஏலத்தில் பங்கேற்க, மே, 14 இறுதி நாள் என, தெரிவிக்கப்பட்டது. அதுவரை எந்த நிறுவனமும் விண்ணப்பிக்காததால், கெடு நாள், மே, 31 வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், அன்றும், ஏலத்தில் எந்த நிறுவனமும் பங்கேற்கவில்லை.இது, மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா, ‘டுவிட்டர்’ தளத்தில் கூறியுள்ளதாவது:ஏர் – இந்தியா விவகாரம், தேசத்தின் கவுரவப் பிரச்னையாக மாறியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, இதுவே சரியான தருணம். ஏர் – இந்தியாவை, இழப்பில் இருந்து மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பரவலான ஆதரவும் உள்ளது. இதை, மத்திய அரசின் தற்கொலை முடிவாக நான் கருதவில்லை. அரசியல் ரீதியில் கிடைத்துள்ள வாய்ப்பாக நான் பார்க்கிறேன்.
ஏர் – இந்தியாவை தற்போது விற்பதை விட, அதை பன்மடங்கு லாபமீட்டும் நிறுவனமாக மாற்றி விற்பதே சிறந்த முடிவாக இருக்கும். அதற்கு கீழ்கண்ட ஐந்து அம்ச திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.* ஏர் – இந்தியா, லாபப் பாதைக்கு திரும்பிய பின் தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியுடன் இருக்க வேண்டும்* டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, ‘மெட்ரோ மனிதர்’ என, பெருமையுடன் அழைக்கப்படும், இ.ஸ்ரீதரனை, ஏர் – இந்தியாவின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க வேண்டும்* புதிதாக நியமிக்கப்படும் தலைவருக்கு, முடிவுகளை எடுக்க, முழு அதிகாரம் வழங்க வேண்டும்* அவர் எடுக்கும் முடிவுகளை, அரசியல் நெருக்கடியின்றி அங்கீகரிக்க வேண்டும்* ஏர் – இந்தியாவை துாக்கி நிறுத்த எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு, தார்மீக ஆதரவை நல்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|