பதிவு செய்த நாள்
04 ஜூன்2018
01:52
பங்குகளின் விலை, அதிவேகமாக உயரக்கூடிய காலகட்டத்தில், முதலீட்டாளர்கள் பலர், விலை உயர்வின் அடிப்படையில் மட்டுமே, தங்களுடைய முதலீட்டு தேர்வுகளை செய்யும் போக்கை அதிகம் விரும்புகின்றனர்.
விலை உயரும் பங்குகளை வாங்கும் இந்த முதலீட்டு அணுகுமுறை, நிறுவனத்தின் அடிப்படை அம்சங்களையும், மதிப்பு சார்பையும் விட, விலை ஏற்றத்தினுடைய வேகத்தின் மீது அதிக நம்பிக்கை செலுத்துகிறது. பங்குகளில் முதலீட்டாளர் நாட்டம் பெருகும் போது, அந்த நாட்டத்தின் காரணமாக, சம்பந்தப்பட்ட பங்குகள் சரிவின்றி விலை உயர்வு காணக்கூடும் என்பதே இந்த அணுகுமுறையின் அடிப்படை நம்பிக்கை.
இந்த முதலீட்டு அணுகுமுறை, ‘மொமென்டம் இன்வெஸ்ட்டிங்’ என்று அழைக்கப்படுகிறது. இதை, வேகம் சார்ந்த முதலீட்டு அணுகுமுறை என்று சொல்லலாம். மதிப்பு சார்ந்த, ‘வேல்யூ இன்வெஸ்டிங்’ முறைக்கு எதிர்மறையான அணுகுமுறையே இந்த வேகம் சார்ந்த முதலீட்டு முறை.
தங்களிடம் இருக்கும் பணத்தை, விலை ஏறும் பங்குகளில் மட்டும் முதலீடு செய்வதன் மூலம், அதிக லாபமீட்ட முதலீட்டாளர்கள் முற்படுகின்றனர். ஒருவேளை, தற்காலிக காரணங்களால், ஒரு பங்கின் விலை சரிந்தால், அந்த பங்கை விற்றுவிட்டு, விலை ஏற்றம் காணும் வேறு பங்குகளில் மாற்றிக்கொள்வது பலரால் கடைபிடிக்கப்படும் அணுகுமுறையாகும்.
வெற்றியின் பக்கம் மட்டுமே நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்ட முதலீட்டாளர்கள், இந்த முறையை பெரிதும் விரும்புகின்றனர். வேகம் விவேகமல்ல என்பது முதலீட்டுக்கும் பொருந்தும். ஆனால், முதலீட்டாளர்கள் சந்தை உயரும் போது எதையும் பொருட்படுத்துவதில்லை.
இத்தகையவர்களின் லாப எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் நிறுவனங்கள் எவை? நிலையான வளர்ச்சியும், நிலைத்த தன்மையும் கொண்ட நிறுவன பங்குகளில் அளவான லாபம் மட்டுமே ஈட்ட முடியும். இது, பல முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில்லை. ஆகவே, இன்னும் வேகமாக லாபமீட்டும் நிறுவனங்களை தேடி அவர்கள் அலைகின்றனர்.
மொமென்டம் இன்வெஸ்டிங் முறையை கொண்டு, பல முதலீட்டாளர்கள், தாங்கள் விரும்பும் லாபத்தை எட்டக் கூடிய நிறுவன வரிசையை அவர்களே ஏற்படுத்த முற்படுகின்றனர். அந்த வரிசையில் அடங்கும் நிறுவனங்கள், குறுகிய காலகட்டத்தில், துரித லாப வளர்ச்சி காட்டும் தன்மை கொண்டவையாக அமைய வேண்டும். தொடர்ந்து, பல ஆண்டுகள் சிறப்பாக இயங்குவது கேள்விக்குறியே. ஆனால், அந்த வளர்ச்சியின் நிலையாமையை அவர்கள் அதிகம் பொருட்படுத்துவதில்லை.
அபரிமிதமான லாப வளர்ச்சி ஓரிரு ஆண்டுகள் நிலைத்தாலே போதும்; அதற்குள் தங்களுக்கு தேவையான லாப இலக்கை அடைந்துவிடலாம் என, இந்த வேகம் சார்ந்த முதலீட்டு முறையை கையாள்கின்றனர்.
இவர்களில் பலர், மிக பிரசித்தி பெற்ற முதலீட்டாளர்கள் என்பதே வியப்பான அம்சம். இவர்களை தொடர்ந்து முதலீடு செய்யும் பொதுமக்களின் முதலீடுகள், பெருவாரியாக தோல்வியில் தான் முடிகின்றன. இருந்தும், பேராசை யாரையும் விட்டுவைப்பதில்லை. பெருமுதலீட்டாளர்களின் லாப வளர்ச்சி பற்றி விளம்பரம் பெருக, அவர்களை தொடர்ந்து தாமும் பணக்காரர் ஆகிவிடலாம் என்றொரு கூட்டம் புறப்படுகிறது.
இந்த கூட்டமே, பங்குகள் விலை வேகமாக கூட வழிவகுக்கிறது. இறுதியில், ஏதோ ஒரு நிகழ்வு ஏற்பட்டு, விலை சரிவை துவக்கி வைக்கிறது. பொதுவாக, இந்த சரிவில் இருந்து மீள, நிறுவனங்கள் தவிப்பது இயல்பு. அதுவே, மேலும் விலை சரிய வழிவகுக்கிறது.
தக்க சமயத்தில், பெருமுதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேற, அவர்களை தொடர்ந்தவர்கள், திசையறியாமல் தவிப்பதை அடிக்கடி காண்கிறோம். இம்முறையும், இது நடந்து இருக்கிறது. வேகம் விவேகமல்ல என்பதை அறிந்தும், வேகம் சார்ந்த மொமென்டம் இன்வெஸ்டிங் பக்கம் நாம் திரள காரணம், பேராசை மட்டுமே.நேர்மையான முறையில் காணும் லாபத்தில், நிறைவான மனநிலையை அடைவதே விவேகம். இந்த விவேகத்தை அடைய மட்டுமே ஒவ்வொரு முதலீட்டாளரும் எப்போதும் முனைய வேண்டும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|