பதிவு செய்த நாள்
05 ஜூன்2018
01:54
மும்பை:பணவீக்க உயர்வு, கச்சா எண்ணெய் விலையேற்றம், ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை உயர்த்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.நேற்று மும்பையில், ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் தலைமையில், ஆறு உறுப்பினர்கள் அடங்கிய நிதிக் கொள்கை குழுவின், மூன்று நாள் கூட்டம் துவங்கியது.
மாற்றம்
இதில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிதிச் சந்தை நிலவரங்கள், பணவீக்க உயர்வு, கச்சா எண்ணெய் விலையேற்றம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, விவாதிக்கப்பட்டது.இன்றும் நடைபெறும் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், நாளை வெளியிடப்படும்.அதில், வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ விகிதம் உயர்த்தப்படலாம் எனவும், தற்போதைய, 6 சதவீத வட்டி விகிதமே நீடிக்கும் எனவும், மாறுபட்ட கருத்துக்களை நிதி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, ஆக்சிஸ் வங்கியின் தலைமை பொருளாதார வல்லுனரான, சவுகதா பட்டாச்சார்யா கூறியதாவது:ரெப்போ வட்டி உயர்த்தப்படும் எனக் கூறப்படுவதை மறுக்க முடியாது. எனினும், தற்போதைய வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்பதற்கு, 70 சதவீத வாய்ப்பு உள்ளது.
வாக்கு
நிதிக் குழு உறுப்பினர்களின் வாக்குகள் தான், முடிவை தீர்மானிக்கும். வட்டி விகிதம் தொடரும் என்றால், விகிதாச்சாரம், 2 : 4 ஆக இருக்கும். வட்டி விகிதம் உயர்த்தப்பட வேண்டும் என்றால், வாக்கு விகிதாச்சாரம், 4 : 2 ஆக இருக்கும்.இதில், எந்த முடிவிற்கு, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் வாக்கு அளிக்கிறாரோ, அந்த முடிவே அறிவிக்கப்படும்.கடந்த ஏப்ரலில், நிதிக் குழு கூட்டத்தில், ‘ரெப்போ வட்டியை, 0.25 சதவீதம் உயர்த்த வேண்டும்’ என, துணை கவர்னர் விரெல் ஆச்சார்யாவும், செயல் இயக்குனர் மைக்கேல் பட்ராவும் வாக்களித்தனர்.ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., உள்ளிட்ட முன்னணி வங்கிகள், ஏற்கனவே டிபாசிட் மற்றும் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன.இத்துடன், பணவீக்க உயர்வும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவும், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நிலைக்கு, ரிசர்வ் வங்கியை கொண்டு செல்லும்.பெட்ரோல், டீசல், வீட்டு பயன்பாட்டு சாதனங்கள், ஆரோக்கிய பராமரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வால், ஏப்ரலில் சில்லரை பணவீக்கம், 4.58 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, மார்ச்சில், 4.28 சதவீதமாக இருந்தது.அதேசமயம், 2017 – 18ம் நிதியாண்டில், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.7 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
இது, திருப்திகரமான புள்ளிவிபரமாக உள்ளபோதிலும், மறுமதிப்பீட்டில் பணவீக்க புள்ளி விபரம் உயரும் என்ற அனுமானத்தையும் பரிசீலித்து, ரிசர்வ் வங்கி முடிவு எடுக்கும் எனலாம்.இவ்வாறு அவர் கூறினார்.நிதி வல்லுனர்களில் பெரும்பாலானோர், ‘தற்போது ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை என்றாலும், அடுத்து, ஆகஸ்ட் மற்றும் அக்டோபரில் உயர்த்தப்படலாம்’ என, தெரிவித்து உள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|