பதிவு செய்த நாள்
08 ஜூன்2018
01:20
சேலம்:பால் உற்பத்தி அதிகரித்து வருவதால், ஆவின் நிர்வாகம், தங்கு தடையின்றி கொள்முதல் செய்ய, அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த பிப்ரவரியில் வெயில் தாக்கம் அதிகரித்து, பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், உற்பத்தியும், ஆவின் கொள்முதலும் குறைந்தது.ஜனவரியில் மொத்த பால் உற்பத்தி, 1.95 கோடி லிட்டராகவும், ஆவின் கொள்முதல், 30.75 லட்சம் லிட்டராகவும் இருந்த நிலையில், பிப்ரவரியில், பால் மொத்த உற்பத்தி, 1.75 கோடி லிட்டராகவும், ஆவின் கொள்முதல், 27.90 லட்சம் லிட்டராகவும் சரிந்தது.
மே இரண்டாவது வாரம் முதல், தற்போது வரை, பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால், பசுந்தீவனம் மட்டுமின்றி, பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தற்போது உற்பத்தி, 2.07 கோடி லிட்டராக உயர்ந்த நிலையில், ஆவின் நிர்வாகம், 32 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. சேலம் ஒன்றியத்தின் பால் கொள்முதல், 5.45 லட்சம் லிட்டரிலிருந்து, 6.20 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில பொதுச் செயலர், ராஜேந்திரன் கூறியதாவது:கோடை மழையால், பசுந்தீவனம் தங்கு தடையின்றி கிடைப்பதால், பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதேநேரம், ஆவின் நிர்வாகம், சில இடங்களில் ஏதாவது காரணம் காட்டி, கொள்முதல் செய்ய மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, தங்கு தடையின்றி பால் கொள்முதல் செய்ய, ஆவின் அதிகாரிகளுக்கு, அரசு உத்தரவிட வேண்டும்.ஆவினில், 1 லிட்டர் பசும்பாலை, 27 ரூபாய்க்கும்; எருமை பாலை, 29 ரூபாய்க்கும் கொள்முதல் செய்கின்றனர். கொள்முதல் விலையை உயர்த்தி, நான்காண்டுகளுக்கு மேலானதால், லிட்டருக்கு, 10 ரூபாய் வரை உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|