பதிவு செய்த நாள்
08 ஜூன்2018
01:26
நியூயார்க்:இந்தியாவில், 2017ல் அன்னிய நேரடி முதலீடுகள் குறைந்துள்ளதாக, ஐ.நா.,வின் வர்த்தக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.,வின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு, சர்வதேச முதலீடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த, 2017ல், இந்தியாவில், 4,000 கோடி டாலர் அளவிற்கே, அன்னிய நேரடி முதலீடுகள் குவிந்தன. இது, 2016ல், 4,400 கோடி டாலராக இருந்தது.இதே காலத்தில், சர்வதேச அன்னிய நேரடி முதலீடு, 23 சதவீதம் குறைந்து, 1.87 லட்சம் கோடி டாலரில் இருந்து, 1.43 லட்சம் கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
எரிவாயு
சர்வதேச அளவில் உருவான வர்த்தக இடர்ப்பாடுகளும், அதன் விளைவாக நிதிச் சந்தைகளில் நீடித்த ஸ்திரமற்ற சூழலும், அன்னிய நேரடி முதலீடு குறைய வழி வகுத்துஉள்ளது.அதேசமயம், இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு, இரு மடங்கு உயர்ந்து, 1,100 கோடி டாலராக அதிகரித்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, பொதுத் துறையைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., அதிக அளவில் வெளிநாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிறுவனம், 2016ல், ரஷ்யாவின், ‘வேன்கோர்நெப்ட்’ நிறுவனத்தின், 26 சதவீத பங்குகளை வாங்கியது. கடந்த ஆண்டு, நமீபியாவின், ‘துல்லோ ஆயில்’ நிறுவனத்தில், 15 சதவீதம் முதலீடு செய்தது.கடந்த, 2017 டிசம்பர் நிலவரப்படி, ஓ.என்.ஜி.சி., 18 நாடுகளில், 39 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. தினமும், 2.85 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மற்றும் அதற்கு ஈடான எரிவாயுவை உற்பத்தி செய்கிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் உடனான இணைத்தல் மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில், இந்திய நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. இத்தகைய ஒப்பந்தங்களின் மதிப்பு, 800 கோடியில் இருந்து, 2,300 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
ஆப்ரிக்கா
ரஷ்யாவின், ‘ரோஸ்நெப்ட்காஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த, சிங்கப்பூரின், ‘பெட்ரோல் காம்ப்ளக்ஸ்’ நிறுவனம், இந்தியாவின், ‘எஸ்ஸார் ஆயில்’ நிறுவனத்தின், 49 சதவீத பங்கை, 1,300 கோடி டாலருக்கு கையகப்படுத்தியுள்ளது. இது, கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட, மிகப் பெரிய ஒப்பந்தமாகும்.
அமெரிக்காவின், ‘இபே, மைக்ரோசாப்ட்’ நிறுவனங்கள்; சீனாவின், ‘டென்சென்ட் ஹோல்டிங்ஸ்’ ஆகியவை, ‘பிளிப்கார்ட் இன்டர்நெட்’ நிறுவனத்தில், 140 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன.ஜப்பானைச் சேர்ந்த, ‘சாப்ட் பேங்க், பேடிஎம்’ நிறுவனத்தைச் சேர்ந்த, ‘ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்தின், 20 சதவீத பங்குகளை, 140 கோடி டாலருக்கு வாங்கியுள்ளது.ஆப்ரிக்காவில் அதிகம் முதலீடு செய்வதில், சீனா, தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர், இந்தியா, ஹாங்காங் ஆகியவை முன்னணியில் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, வளர்ச்சி அடைந்த நாடுகளில், அன்னிய நேரடி முதலீடு, 37 சதவீதம் சரிவடைந்து, 71 ஆயிரத்து, 200 கோடி டாலராக குறைந்துள்ளது. இந்தாண்டு இறுதியில், இந்நாடுகளில் அன்னிய நேரடி முதலீடு, 10 சதவீதம் உயரக் கூடும்.
ஐ.நா., சர்வதேச முதலீடுகள் அறிக்கை
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|