பதிவு செய்த நாள்
09 ஜூன்2018
00:14
புதுடில்லி:மத்திய அரசு, இரண்டு நிதியாண்டுகளாக, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத, 2.26 லட்சம் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்ய திட்டமிட்டு உள்ளது.
ஒரு நிறுவனம், தொடர்ந்து செயல்படாமல் இருந்தாலோ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேல், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய தவறினாலோ, அந்நிறுவனத்தின் பதிவு ரத்து செய்யப்படும்.பலர், சட்ட விரோத பணப் பரிமாற்றத்திற்கு, போலி நிறுவனங்களை துவக்குகின்றனர். இத்தகையநிறுவனங்கள், ஆண்டுதோறும் வரவு – செலவு கணக்குகளை, அரசுக்கு தாக்கல் செய்வதில்லை.
தகுதி நீக்கம்
கடந்த ஆண்டு, இத்தகைய போலி நிறுவனங்கள் மூலம் நடைபெறும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்க, நீண்ட காலம் செயல்படாமலும், கணக்கு தாக்கல் செய்யாமலும் இருந்த, 2.26 லட்சம் நிறுவனங்களின் பதிவை, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் நீக்கியது.இந்நிறுவனங்களைச் சேர்ந்த, 3.09 லட்சம் இயக்குனர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுஉள்ளனர்.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, நடப்பு2018 – 19ம் நிதியாண்டில், போலி நிறுவனங்களை களையெடுக்கும் பணியை மத்திய அரசு துவக்க உள்ளது.இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2015- – 16 மற்றும், 2016- – 17ம் நிதியாண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கைகளை, 2.25 லட்சம் நிறுவனங்கள் தாக்கல் செய்யவில்லை.
பங்குதாரர்களுக்கு வரையறுக்கப்பட்ட உரிமைகளை கொண்ட பிரிவின் கீழ், 7,191 நிறுவனங்கள் கணக்கு தாக்கல் செய்யாமல் உள்ளன. இந்த வகையில், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், 2,25,910 நிறுவனங்களின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.முன்னதாக, அந்த நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்படும். அதற்கு, நிறுவனங்கள் அளிக்கும் பதிலைப் பொருத்து, நடவடிக்கை இருக்கும்.
செயலாக்க குழு
போலி நிறுவனங்களை கண்டுபிடித்து களையெடுக்க, 2017, பிப்ரவரியில், மத்திய நிதித் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா மற்றும் நிறுவனங்கள் விவகாரங்கள் துறை செயலர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் தலைமையில் செயலாக்க குழு அமைக்கப்பட்டது.இக்குழு, சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து, மூன்று பிரிவுகளின் கீழ், போலி நிறுவனங்களை வகைப்படுத்தியது.
அதன்படி, 16,537 போலி நிறுவனங்கள், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.மேலும், 100 சதவீதம் பொது இயக்குனர்களுக்கு தொடர்பு உள்ள, 16,739 போலி நிறுவனங்களும் அடையாளம் காணப்பட்டன.சந்தேகத்திற்குரிய பிரிவில், 80,670 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டு, தீவிர மோசடி புலனாய்வு பிரிவின் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|