பதிவு செய்த நாள்
09 ஜூன்2018
00:16
கோவை:மாமல்லபுரம் சிற்பங்களை அடுத்து, தமிழகத்தின் எட்டு கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு கைத்திறன் வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த சில தனித்தன்மை வாய்ந்த மிக தொன்மையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு, மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தஞ்சாவூர் ஓவியத்துக்கு முதல் முறையாக, 2007ல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
அடுத்து, நாகர்கோவில் நகைகள், தஞ்சாவூர் கலைத்தட்டு, சுவாமிமலை பஞ்சலோக சிற்பங்கள், தஞ்சாவூர் பொம்மைகள், நீலகிரி தோடர் பழங்குடி மக்களின் பூத்தையல் வேலைப்பாடு, பத்தமடை பாய்கள், நாச்சியார்கோவில் விளக்குகள் உள்ளிட்ட கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெறப்பட்டன.
கடந்த, 2017 நவம்பரில் மாமல்லபுரம் கற்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.நடப்பாண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தேர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், திருச்சி அம்பாவூர் மரச்சிற்பம், தஞ்சாவூர் கருப்பூர் ஓவியங்கள், தஞ்சாவூர் ஒட்டும் கண்ணாடி வேலை, தஞ்சாவூர் - புதுக்கோட்டை நெட்டிவேலை ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு கோரப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி - மயிலாடி கல் சிற்பங்கள், நாமக்கல் மாவட்டத்தின் மாக்கல் (முற்றாத கருங்கல்) உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட, எட்டு கைத்திறன் வகைகள் புவிசார் குறியீடு பெற, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.இது தொடர்பான விண்ணப்பங்கள், மத்திய அரசின் புவிசார் குறியீட்டு பதிவக ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக கைத்திறன் வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|