பதிவு செய்த நாள்
11 ஜூன்2018
00:56
வாராக் கடன் தொல்லையில் இருந்து, வங்கிகளை மீட்கும் பணியில், அரசு தொடர்ந்து முயற்சிக்கிறது. இதன் நீட்சியாக, அடுத்து என்ன நடக்கும் என்ற குழப்பத்தில் சந்தை உள்ளது. கூடவே குழப்பமான இந்த சூழலில், நிதி அமைச்சகம் என்ன செய்யும் என்ற சந்தேகமும் சந்தைக்கு உள்ளது.
அரசு, ஒரு பக்கம் வங்கிகளுக்கு முதல் கொடுக்க முயற்சித்தாலும், அது போதாது என்பதே சந்தையின் ஒருமித்த கருத்து. அரசு மேல் நடவடிக்கைகளில் துரிதமாக இறங்க வேண்டும் என, எதிர்பார்க்கிறது சந்தை. ஆனால், அகற்கான நிதி ஆதாரமும், உறுதியும் அரசிடம் இருக்கிறதா என்று சந்தேகப்படுகிறது சந்தை.அந்த சந்தேகத்தை தெளிவாக போக்கும் நடவடிக்கைகளை, நிதி அமைச்சகம் தற்போது எடுக்கத் துவங்கியுள்ளது. ‘பேடு பேங்க்’ என்ற, வாராக் கடன்களை மட்டுமே கொண்டு இயங்கக்கூடிய, புதிய வங்கி அமைப்பை ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம், பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்களை இந்த புதிய வங்கிக்கு மாற்றி ஒதுக்கி, அதன் இயக்கத்தின் மூலம் அவற்றை சீரமைக்கும் முடிவிற்கு அரசு வந்துள்ளது.இதனால், வாராக் கடனை மட்டுமே கவனமாக கொண்டு இயங்கும் ஒரு தனி அமைப்பு உருவாகும். இந்த முடிவின் மூலம், பொதுத்துறை வங்கிகள் தங்கள் தற்கால வணிகத்தில் மட்டும் கவனம் செலுத்தி, ஒரு நல்ல எதிர்காலம் நோக்கி நகர முடியும்.
வாராக் கடன் சார்ந்த பொறுப்புகளையும், தீர்வுகள் மூலம் வரும் ஆதாயங்களையும், தீர்வு ஏற்படாததன் விளைவுகளையும் இந்த புதிய அமைப்பு வாயிலாக அரசே ஏற்கும். இப்படி ஓர் அமைப்பை ஏற்படுத்த தனியாக சட்டம் போட வேண்டும். பார்லிமென்டின் அனுமதி பெற வேண்டும்.
கடந்த, 1999 – -2004ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ‘யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா’ நிதி சிக்கலில் வீழ்ந்தது. அப்போது, எஸ்.யு.யு.டி.ஐ., என்ற அமைப்பையும், அதற்கான சட்டங்களையும் அரசு ஏற்படுத்தி, முதலீட்டாளர்களின் பணத்தையும், நம்பிக்கையையும் காத்தது. அதே அணுகுமுறையை இப்போதும் அரசு எடுக்க துணிந்துள்ளது.
எஸ்.யு.யு.டி.ஐ., மூலம், அரசு பிற்காலத்தில் பெரும் ஆதாயம் கண்டுள்ளதை இங்கு புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.அரசின் அடிப்படை நம்பிக்கை என்ன? எந்த அடிப்படையில் இந்த பேடு பேங்க் யோசனை உருவாகிறது?நிறுவனங்கள் பல, இப்போதும் சிக்கலில் உள்ளன. ஆனால், அவற்றின் சொத்து மதிப்பும், அக்கடன்களுக்கு உத்தரவாதம் கொடுத்தவர்களின் போதுமான சொத்துகளும், இந்த கடன்களை காலப்போக்கில் ஓரளவு வசூலிக்க உதவும்.
ஆனால், வங்கிகளின் கணக்கு விதிகள் அதற்கு தேவையான கால அவகாசம் கொடுக்காது. உடனடியாக வாராக் கடன்களுக்கு அரசிடமிருந்து முதல் கொண்டு வருவதற்கான நிர்ப்பந்தம் ஏற்படும். ஆனால், அரசால் ஓரளவுக்கு தான் மறுமூலதன முதலீடு செய்ய முடியும். அதனால் தான் இந்த புதிய அணுகுமுறையை அரசு எடுக்கத் துணிந்துள்ளது.
எஸ்.யு.யு.டி.ஐ., அமைத்தபோது, அதற்கும் முன் மாதிரி இல்லாத சூழல் தான் நிலவியது. இப்போதும் அதே சூழலே நிலவுகிறது. முன்மாதிரி இல்லாத சூழலில் ஒரு முடிவு எடுக்கும் போது, அதை பலர் ஏற்கவோ, மறுக்கவோ செய்வது சகஜம்.ஆனால், அத்தகைய முடிவுகள் காலப்போக்கில் தான் அளவிடப்பட வேண்டும். அவசர தீர்வுகளும், தீர்ப்புகளும் இந்த சூழலில் சரிவர அமையாது.
ஆனாலும், தெளிவான முடிவு எடுத்து, முன்னே செல்ல வேண்டிய அவசியம், அரசுக்கு உள்ளது. அதை காலம் தாழ்த்தாமல் எடுப்பது அவசியம். இந்த முடிவுகள் குறித்து, சந்தையின் வரவேற்பை அரசால் உடனடியாக பெறமுடியாவிட்டாலும், அவை நிராகரிக்கப்படும் சூழல் இல்லை என்பதை, முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் பங்குச்சந்தை
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|