பதிவு செய்த நாள்
11 ஜூன்2018
01:01
மத்திய ரிசர்வ் வங்கியின், நிதிக் கொள்கைக் குழுவின் மூன்று நாள் சந்திப்புக்குப் பின், ‘ரெப்போ’ விகிதம், 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது மட்டும் தான் தலைப்புச் செய்திகளில் அடிபட்டது. ஆனால், மாநில அரசுகளின் நிதி வலிமையைச் சோதிக்கும் ஒரு திருத்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது என்ன?
ஆர்.பி.ஐ., இதர வங்கிகளுக்குத் தரும் கடன் தொகைக்கு வசூலிக்கும் வட்டியே, ‘ரெப்போ’ என்பது. கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த விகிதம் உயரவில்லை. 6 சதவீத ரெப்போ தற்போது, 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட உயர்வே; அதனால், பெரிய அதிர்ச்சி இல்லை.
ஆனால், அதிர்ச்சி வேறு இடத்தில். நிதிக் கொள்கைக் குழுவின் ஆறு உறுப்பினர்களுமே, வட்டி விகித உயர்வுக்கு ஏகோபித்த ஆதரவு தெரிவித்தது, நம் கவனத்தைக் கவர்ந்தது. ஏன் இந்த ஒருங்கிணைந்த முடிவு?
காரணம் என்ன?
நம் பொருளாதாரத்தில், பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. அதாவது, 6 சதவீதமாக, ரெப்போ விகிதம் இருக்கும் போது, பொது மக்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு பல்வேறு கடன்களை, வங்கிகள் அபரிமிதமாகக் கொடுத்தன.அது சமூகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பணப்புழக்கமாகப் பெருகி, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளையும் கட்டணங்களையும் உயர்த்தின. இது, பணவீக்கத்துக்கு வழிகோலியது. இதனால், விலைவாசி உயர்வு.
இன்றைக்கு சராசரி பணவீக்கம், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், 4.8 முதல், 4.9 சதவீதமும்; இரண்டாம் அரையாண்டில், 4.7 சதவீதமும் இருக்கும் என, ஆர்.பி.ஐ., எதிர்பார்க்கிறது. பணவீக்கத்தை, 4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற திட்டம் கைநழுவிப் போய்க்கொண்டு இருக்கிறது.கச்சா எண்ணெய் விலைஉயர்வு, நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவை, வரும் காலாண்டுகளில் உயரக்கூடிய வாய்ப்பிருப்பதாக நிதிக் கொள்கைக் குழு கருதுகிறது. இவற்றை எதிர்கொள்ள இருக்கும் பல வழிகளில் ஒன்று தான், ரெப்போ விகிதத்தை உயர்த்துவது.
இதில், 0.25 சதவீத விகிதம் உயர்த்தப்பட்டதால், ஆர்.பி.ஐ.,யிடமிருந்து, இதர வங்கிகள் வாங்கும் கடன் அளவு குறையும். நம் பொருளா தாரத்தில் உள்ள உபரிப் பணப்புழக்கம் மட்டுப்படும். அதன் மூலம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.பணப்புழக்கம் அதிகரிக்கும்போது, ரெப்போ விகிதத்தை உயர்த்தி, உபரிப் பணத்தை உறிஞ்சி எடுப்பதும்; வளர்ச்சி வேண்டும் எனும்போது, ரெப்போ விகிதத்தைத் தளர்த்தி, பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதும், ஆர்.பி.ஐ., செய்யும் வழக்கமான வேலை தான்.
தாக்கம் என்ன?
இதனால், சமூகத்தின் அத்தனை அடுக்குகளிலும் தாக்கம் உண்டு. வாகனக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் உயரும். தொழில் நிறுவனங்கள், வங்கிகளில் இருந்து பெறும் கடன்களுக்கான விகிதங்கள் கூடும். சந்தையிலிருந்து அரசு பெறும் கடனுக்கான வட்டியும் உயரும்.
கூடவே, சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களும் உயர வாய்ப்புண்டு. மொத்தத்தில், இந்த ரெப்போ விகித உயர்வை, யாராலும் இரு கரம் நீட்டி வரவேற்க முடியாது; ஆனால், இதைத் தவிர்க்கவும் முடியாது என்பதே யதார்த்தம். இந்த ஆண்டு இறுதிக்குள், மற்றொரு முறை ரெப்போ விகித உயர்வு இருந்தே தீரும் என, ஆரூடம் சொல்பவர்களும் இருக்கின்றனர்.இது, இந்தியா மொத்தத்துக்குமான பிரச்னை.
நிதிக் கொள்கைக் குழுவின் அறிக்கை, ஏற்கனவே இருந்து வந்த கொள்கை ஒன்றில் திருத்தம் செய்துள்ளது. அது, மாநில நிதி ஆதாரங்களுக்கு வேட்டு வைப்பதாக அமைந்துள்ளது.
தேவை சரியும்
அதாவது, மாநில அரசுகள் தங்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டும். இதற்கு, ‘ஸ்டேட் டெவலப்மென்ட் லோன்’ என்று பெயர். மத்திய அரசு நிர்ணயிக்கும் வட்டி விகிதத்தை விட, 0.25 சதவீதம் அதிகமாக இந்தக் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் இருக்கும்.இத்தகைய மாநில கடன் பத்திரங்கள் என்பவை, மத்திய அரசின் நிதி வலிமையையே தங்கள் அடிநாதமாக கொண்டிருக்கும்.
அதாவது, அதற்கான உத்தரவாதமாக மத்திய அரசே திகழும். அதனால் தான், வங்கிகளும், மியூச்சுவல் பண்டுகளும், இதர நிதி நிறுவனங்களும், மாநில அரசுகளின் கடன் பத்திரங்களை வாங்க முன்வருகின்றன.
சமீபத்திய நிதிக் கொள்கைக் குழு அறிக்கையில், மத்திய அரசு வழங்கும் உள்ளார்ந்த ஆதரவு விலக்கப்பட்டுள்ளது. அதாவது, மாநில அரசுகள் தங்களுடைய சொந்த நிதி நிலைமையை ஒட்டியே கடன் பத்திரங்கள் வெளியிட வேண்டும். இங்கே தான் தலைவலியும், திருகுவலியும் ஆரம்பிக்கிறது.
பல மாநிலங்களின் நிதி நிலைமை மிகவும் மோசம்; அவற்றின் நிதிச்சுமையோ பெருஞ்சுமை. இதில், எப்படி இவர்களால் தங்களுடைய பலத்தை நிரூபித்து, தங்கள் கடன் பத்திரங்களை விற்பனை செய்ய முடியும்? எந்த வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் இவர்களது கடன் பத்திரங்களை வாங்கும்?
பெருகும் வட்டி
முதலில் மாநில நிதி நிலைமையை ஆராய்ந்து பார்த்து, ‘ரேட்டிங்’ நிறுவனங்களிடமிருந்து தரச் சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அவரவர் நிதி நிலைமையை ஒட்டி, வழக்கமாக கொடுக்கும் வட்டியை விட, 1 சதவீதமேனும் கூடுதலாக கொடுக்க வேண்டிய நிலை மாநிலங்களுக்கு ஏற்படலாம். தரச் சான்றிதழ் இல்லாது போனால், இன்னொரு சதவீத வட்டி கூடுதலாக வழங்க வேண்டும்.
அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாநிலம் பெறும் நிதி வருவாயில், வட்டிக்குச் செலுத்த வேண்டிய தொகை உயர்ந்து கொண்டே போகும். சம்பளத்தையோ, மானியங்களையோ மாநில அரசுகளால் வெட்ட முடியாது. வளர்ச்சிப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் குறைத்து, வட்டியை செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும்.
‘நீ உன் சொந்தக் காலில் நின்று கொள், என் முதுகில் சவாரி செய்யாதே’ என்பதே, ஆர்.பி.ஐ.,யின் செய்தி. எல்லாவற்றையும் சந்தையே தீர்மானிக்கட்டும் என்பது சரியான அணுகுமுறை தான். ஆனால், அதற்கு மாநிலங்கள் தகுதி பெற வேண்டுமே?பொருளாதார ரீதியாக வளமாக இருக்கும் மாநிலங்களுக்கு கடன் பத்திரங்களை வெளியிடுவதோ, விற்பனை செய்வதோ சிரமமாக இருக்காது. ஆனால், தமிழகம் போல் கடன் சுமை மிகுந்துள்ள மாநிலங்கள் நிலைமை என்ன?ரெப்போ விகிதம் உயர்வு, மாநில அரசுகளுக்கு ஒரு, ‘ரியாலிட்டி செக்’ வைத்துள்ளது.
ஆர்.வெங்கடேஷ் பத்திரிகையாளர்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|