பதிவு செய்த நாள்
14 ஜூன்2018
00:32
மும்பை:நாட்டின் சில்லரை பணவீக்கம் உயர்ந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டியை மேலும் உயர்த்த வாய்ப்பு உள்ளதாக, நிதித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது நிதிக் கொள்கை அறிக்கையை, 6ம் தேதி வெளியிட்டது. அதில், ரிசர்வ் வங்கி, சில்லரை பணவீக்க மதிப்பீட்டை, 0.30 சதவீதம் உயர்த்தி இருந்தது. மேலும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி, 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.25 சதவீதமாக நிர்ணயித்துள்ளதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம், மே மாத சில்லரை பணவீக்க புள்ளிவிபரம் வெளியானது. அதில், நான்கு மாதங்களில் இல்லாத வகையில் சில்லரை பணவீக்கம், 4.87 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, மத்திய புள்ளியியல் துறையின் அறிக்கை தெரிவித்தது.இதனால், ‘ஆக., 1ல், ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள, நிதிக் கொள்கை அறிக்கையில், ரெப்போ வட்டி மீண்டும், 0.25 சதவீதம் உயர்த்தப்படலாம்’ என, பி.என்.பி., பரிபாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘தற்போதைய நிலையிலேயே கச்சா எண்ணெய் விலை நீடிக்கும்பட்சத்தில், சில்லரை பணவீக்கம் மேலும் உயர்ந்தால், ரெப்போ வட்டி மீண்டும் உயர்த்தப்படலாம். ‘இதில், மத்திய அரசு உயர்த்தியுள்ள, வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையின் தாக்கத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்’ என, யு.பி.எஸ்., செக்யூரிட்டிஸ் நிறுவனம் கூறியுள்ளது.‘பணவீக்க உயர்வின் சமிக்ஞையால், நிதிப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரெப்போ வட்டி உயர்த்தப்படலாம்’ என, டாய்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.இந்த கருத்துகளுக்கு மாறாக, ‘ரெப்போ வட்டியில் மாற்றம் இருக்காது’ என, பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|