பதிவு செய்த நாள்
14 ஜூன்2018
00:35
மும்பை:மத்திய அரசின், ‘வாராக் கடன் வங்கி’ திட்டத்தை, இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., வரவேற்றுள்ளது.மத்திய நிதியமைச்சர் பொறுப்பில், தற்காலிகமாக உள்ள பியுஷ் கோயல், சமீபத்தில், வங்கிகளின் வாராக் கடன் பிரச்னைக்கு இரண்டு யோசனைகளை தெரிவித்திருந்தார்.முதலாவதாக, மத்திய அரசு, ஏ.ஆர்.சி., எனப்படும் சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தை துவக்கி, பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடனை, குறிப்பிட்ட சதவீத தள்ளுபடியில் வாங்கிக் கொள்ளலாம். இரண்டாவதாக, பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடனை மட்டும் நிர்வகிக்க, மத்திய அரசு, ஏ.எம்.சி., எனப்படும் சொத்து நிர்வாக நிறுவனத்தை துவக்கலாம் என, அவர் கூறியிருந்தார்.இந்த இரண்டு யோசனைகளில் ஒன்றின் கீழ், வாராக் கடன் வங்கி அமைத்து, பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்கள் அனைத்தையும் மாற்றி விட்டால், வங்கிகளின் நிதி நிலை அறிக்கை சுத்தமாகி விடும்.
அத்துடன், டிபாசிட்திரட்டுதல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பிரதான சேவைகளில் மட்டுமே வங்கிகள் கவனம் செலுத்த வழி ஏற்படும்.சமீபத்தில், ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய கடுமையான நெறிமுறைகளும், கடன் வழங்குவதில் ஒழுங்குமுறையை ஏற்படுத்தி, வங்கிகள், வாராக் கடன்களை ஒரு வரையறைக்குள் வைக்க உதவும்.
இது தவிர, திவால் சட்டத்தின் கீழ் தற்போது வாராக் கடன்கள் விரைந்து பைசலாகி வருவதும், வங்கித் துறை வளர்ச்சிக்கு துணை புரியும் என, மத்திய அரசு கருதுகிறது.அதனால், பியுஷ் கோயல், தன் யோசனைகளை பரிசீலிக்க, பஞ்சாப் நேஷனல் வங்கி தலைவர், சுனில் மேத்தா தலைமையில், குழு ஒன்றை அமைத்துள்ளார்.
இக்குழு, வாராக் கடன் வங்கி அமைப்பது குறித்து ஆராய்ந்து, அதன் பரிந்துரையை மத்திய அரசுக்கு விரைவில் வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, சி.ஐ.ஐ., தலைவர் பார்தி மிட்டல் கூறியதாவது:வங்கிகளின் வாராக் கடன் பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம். கடந்த கால தவறுகள், எதிர்காலத்தில் ஏற்படக் கூடாது.
வங்கி நிதி நிலை அறிக்கையில், வாராக் கடன் இல்லாத நிலை உருவாக வேண்டும். அதற்கு, வாராக் கடன் வங்கி உதவும் என, நம்புகிறேன். இந்த திட்டத்தை, சி.ஐ.ஐ., வரவேற்கிறது. இதன் மூலம், வங்கிகளின் கடன் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலை மாறும்.இவ்வாறு அவர் கூறினார்
வாராக் கடன் வங்கிக்கு, அமெரிக்காவின் பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் வங்கியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம்
பொதுத் துறை வங்கிகளின் முதலாளியாக மத்திய அரசு உள்ளது. இவ்வங்கிகளின் வாராக் கடன், 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு நுாதனமாக யோசித்துள்ளது. வாராக் கடன் வங்கி என்ற புதிய திட்டத்தின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து ஆராய, சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் அறிக்கை, இரு வாரங்களில் வெளியாகும் என, தெரிகிறது. அதுவரை, கருத்து தெரிவிக்க விரும்பவில்லை; பொறுத்திருந்து பார்ப்போம்.
உதய் கோட்டக் செயல் துணை தலைவர், கோட்டக் மகிந்திரா வங்கி, (பார்தி மிட்டலை தொடர்ந்து, சி.ஐ.ஐ., தலைவராக பொறுப்பேற்க உள்ளவர்)
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|