பதிவு செய்த நாள்
15 ஜூன்2018
00:43
திருப்பூர்:சீன நிறுவனங்களின் வர்த்தக தாக்குதலில் இருந்து, ஆடை உற்பத்தி துறையை பாதுகாக்க, திருப்பூர் பின்னலாடை துறையினர், மத்திய அரசிடம் முறையிட்டுள்ளனர்.கடந்த, 2017- – 18ம் நிதியாண்டில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 7.59 சதவீதம் சரிவடைந்தது. நடப்பு நிதியாண்டிலும், ஏற்றுமதிவர்த்தகம் வளர்ச்சி பெறவில்லை.
திருப்பூர் பின்னலாடை துறையினர், மத்திய அமைச்சர்களை சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்சங்க தலைவர், ராஜா சண்முகம், பொருளாளர், மோகன், டில்லி சென்று, நேற்று, மத்திய சிறு, குறு நிறுவன அமைச்சர், கிரிராஜ் சிங் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானியை சந்தித்தனர்.
ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், ‘‘கடந்த ஏப்., 30 வரையிலான ஸ்டேட் லெவிஸ் தொகையை, மத்திய அரசு விடுவித்துள்ளது. கடன் செலுத்தாத நிறுவனங்களின், வங்கி கணக்கை முடக்குவதற்கான அவகாசம், 90ல் இருந்து, 180 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது. சீன நிறுவனங்கள், எல்லை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வந்து, மறைமுக வர்த்தக தாக்குதலில் ஈடுபடுகின்றன. இதை கண்டுகொள்ளவில்லை என்றால், நம் ஆயத்த ஆடை துறை வளர்ச்சி கடும் சரிவை சந்திக்க வேண்டிவரும். சீனாவின் மிரட்டல் குறித்தும், நம் ஆடை உற்பத்தி துறைக்கு, சலுகைகளை அதிகரித்து தர வேண்டியதன் அவசியம் குறித்தும் தெரிவித்தோம்,’’ என்றார்.
அமைச்சர்களிடம் தொழில் துறையினர் முன் வைத்த கோரிக்கை விபரம்:வங்கதேசம், வியட்னாம், கம்போடியா, இலங்கை போன்ற நம் நாட்டின் எல்லையோர நாடுகளில், சீன நிறுவனங்கள், ஆடை உற்பத்தி கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றன.இதனால், நம் ஆடை ஏற்றுமதி மட்டுமின்றி, உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையும் பாதிக்கும் நிலை உள்ளது.உள்நாட்டு வர்த்தக சந்தையிலும் சீன ஆடைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
பல, ‘பிராண்டட்’ நிறுவனங்கள், சீன நிறுவனங்களிடம் ஆடை தயாரித்து பெற துவங்கிவிட்டன. இதே நிலை தொடர்ந்தால், ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை உற்பத்தி துறை கடுமையான பாதிப்பை சந்திக்கும்.சீன நிறுவனங்களிடமிருந்து, ஆயத்த ஆடை உற்பத்தி துறையை பாதுகாப்பது அவசியம். இந்த வர்த்தக யுக்தியை, மத்திய அரசு அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|