பதிவு செய்த நாள்
15 ஜூன்2018
00:49
மும்பை:பெங்களூரைச் சேர்ந்த, இன்போசிஸ், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட, வெள்ளி விழா நிறுவனம் என்ற சிறப்பை, நேற்று பெற்றது.
கான்பூர், ஐ.ஐ.டி.,யின், முதுகலை பட்டதாரியான, நாகவர ராமாராவ் நாராயணமூர்த்தி, தன் நண்பர்கள் நந்தன் நிலேகனி, கோபாலகிருஷ்ணன், சிபுலால் உள்ளிட்ட அறுவருடன் இணைந்து, ‘இன்போசிஸ் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தை, 1981, ஜூலை, 7ல் துவக்கினார்.சாப்ட்வேர் சேவைகளில் விறுவிறு வளர்ச்சியை கண்ட இந்நிறுவனம், 1993ல் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கியது.
ஒரு பங்கின் விலை, 95 ரூபாய் என, குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு, விண்ணப்பங்கள் வரவில்லை. அதனால், பங்கு வெளியீட்டை நிர்வகித்த ஈனாம் குழுமத்தின் நிறுவனர், வல்லப பன்சாலி, கோரப்படாத பங்குகளை வாங்கி, நாராயணமூர்த்தி வயிற்றில் பால் வார்த்தார். இதையடுத்து, பங்கு ஒதுக்கீடு முடிந்து, ஜூன், 14ல், மும்பை பங்குச் சந்தையில், இன்போசிஸ் பங்குகள் பட்டியலிடப்பட்டன.
பங்கு வெளியீட்டில், இந்நிறுவனத்தின், 100 பங்குகளை, 9,500 ரூபாய்க்கு ஒருவர் வாங்கியிருந்தால், அவர் தற்போது, 5 கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருப்பார். இந்த வகையில், இன்போசிஸ் பங்குகள் மூலம் ஏராளமானோர் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர்.கடந்த, 25 ஆண்டுகளாக, இன்போசிஸ் பங்கு, ஆண்டுக்கு சராசரியாக, 36 சதவீத வளர்ச்சியை கண்டு வந்துள்ளது. இந்தாண்டு மட்டும், இந்நிறுவனத்தின் பங்கு விலை, 23 சதவீதம் உயர்ந்துள்ளது.நேற்றைய நிலவரப்படி, இன்போசிஸ் பங்கின் விலை, 1,240 ரூபாய் ஆகும்.
இது, 1,355 ரூபாய் வரை உயரும் என, ‘யு.பி.எஸ்., செக்யூரிட்டிஸ்’ நிறுவனம் கணித்துள்ளது.வெள்ளி விழா கண்ட இன்போசிஸ் நிறுவனத்திற்கு, நேற்று, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், வாழ்த்துகள் குவிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|