பதிவு செய்த நாள்
18 ஜூன்2018
07:10
நிதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழுன் முன், ரிசர்வ் வங்கியான, ஆர்.பி.ஐ.,யின் கவர்னர், உர்ஜித் படேல் சமீபத்தில் ஆஜராகி, இந்திய வங்கித்துறை மற்றும் பொருளாதாரம் குறித்து விளக்கங்கள் அளித்ததோடு, தன் இயலாமைகளையும் தெரிவித்தார். அதற்கு, வங்கித் துறை ஊழியர்கள் சங்கம் அளித்துள்ள ஆலோசனைகள், நம் கவனத்தைக் கவர்ந்துள்ளன. அவை என்ன?
பல்வேறு துறைகள் சார்பாக, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், கேள்வி கேட்கவும், பார்லிமென்ட் உறுப்பினர்கள் இடம்பெற்ற நிலைக்குழுக்கள் உண்டு. நிதித் துறைக்கான நிலைக்குழுவும் அதில் ஒன்று. இதன் தலைவர், காங்கிரசைச் சேர்ந்த வீரப்ப மொய்லி. இதில், முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங்கும் இருக்கிறார். பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பல பொதுத் துறை வங்கிகளில் பெருகியுள்ள மோசடிகளின் பின்னணியில், ஆர்.பி.ஐ., கவர்னர் உர்ஜித் படேலை அழைத்து, விளக்கம் கேட்க முனைந்தது, நிதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு.
உர்ஜித் படேல் பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வங்கி மோசடிகள், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தொடர் நிகழ்வுகள், வாராக்கடன்கள், ஏ.டி.எம்.,மில் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு குறித்தெல்லாம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, படேல் பதில் அளித்துள்ளார். அதில், அவர் தெரிவித்த மூன்று கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டியவை.
கூடுதல் அதிகாரம்?
முதல் கருத்து, ஆர்.பி.ஐ.,க்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்பது. வாராக்கடன் பிரச்னை பூதாகரமாக வெளிவந்த சமயத்தில் இருந்தே, படேல் கூடுதல் அதிகாரம் பற்றி பேசி வருகிறார். தனியார் வங்கிகளைத் தம்மால் கட்டுப்படுத்த முடியும். ஆனால், பொதுத் துறை வங்கிகளைச் சேர்ந்த நிர்வாகக் குழுவினரையோ, உறுப்பினர்களையோ, தலைவரையோ தம்மால் மாற்ற முடியாது; அதற்கான அதிகாரம் இல்லை என்பதே, அவரது வாதம்.
இப்படி இவர் பேச ஆரம்பித்தே, ஓராண்டுக்கு மேல் ஓடிப் போய்விட்டது. இவருக்கு உள்ள அதிகாரமே போதும், இனியும் வழங்க வேண்டியதில்லை என்ற எதிர் வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஆனாலும், கூடுதல் அதிகாரத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் படேல். இந்த ஓராண்டில், இவர் எந்தெந்த அதிகாரங்கள் தமக்கு வேண்டும் என்றோ, அதனால், வங்கி நிர்வாகத்தில் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன என்றோ, இதுவரை வெளிப்படையாகப் பேசவில்லை. நிதி அமைச்சகத்திடம் எடுத்து வைத்தாற்போன்றும் தெரியவில்லை.
முழு அதிகாரத்தையும் கவர்னருக்கே வழங்குவது, எவ்வளவு துாரம் ஜனநாயக ரீதியான செயல்பாட்டில் சரியாக இருக்கும் என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. நிதி, ராணுவம், நிர்வாகம் ஆகிய துறைகளில் வளர்ந்த நாடுகள் கூட, அரசு தங்கள் கட்டுப்பாட்டை தளர்த்துவதில்லை. ஆனாலும், கூடுதல் அதிகாரம் கோருகிறார் என்றால், அவர், தன்னுடைய பொறுப்பை தட்டிக்கழிக்கிறாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த வாதத்துக்கு வலு சேர்ப்பது போல் இருக்கிறது அவரது இரண்டாவது கருத்து.
அசாதாரண நிலை :
பொதுத்துறை வங்கிகளுக்கு, 1.2 லட்சம் கிளைகள் உள்ளன. அவை அனைத்தையும் கண்காணிக்கவோ, மேற்பார்வையிடவோ, ஆர்.பி.ஐ., யால் முடியாது, சாத்தியமில்லை என, தெரிவித்து உள்ளார் படேல். பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள் தான், கிளைகளின் அன்றாடச் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டுமேயன்றி, ஆர்.பி.ஐ., அந்தப் பணியை செய்ய இயலாது என்பதே படேலின் வாதம்.
அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆர்.பி.ஐ., தலையிட்டால், வங்கிகளின் சுதந்திரம் பறிபோய்விட்டது, முடிவெடுக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது என்ற, விமர்சனங்கள் எழலாம். ஆனால், இன்றைய நிலை முற்றிலும், வேறொரு எல்லையில் இருக்கிறது. பெரும்பாலான பொதுத் துறை வங்கிகள், ஏதேனும் ஒரு மோசடியில் சிக்கிக் கொண்டிருப்பது கண்கூடு. வாராக்கடன்கள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. பெரு நிறுவனங்களின் வாராக்கடன் தொகைகள் தான் தற்போதைக்கு வெளியுலகுக்கு தெரிய வந்திருக்கின்றன.
சிறு, குறு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் பாக்கிகளின் விபரங்கள் வெளிவருமானால், வாராக்கடன் பிரச்னை எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக இருக்க வாய்ப்புண்டு என, எச்சரிக்கும் நிதி நிபுணர்கள் இருக்கின்றனர். இது, ஒரு அசாதாரண நிலை; வழக்கத்துக்கு மாறான நிலை. அதில், கண்காணிப்பும், மேற்பார்வையும் நிச்சயம் தேவைப்படுகிறது.
இதைத் தான் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது. எல்லா கிளைகளையும், எல்லா செயல்பாடுகளையும் கண்காணியுங்கள், ஒழுங்குபடுத்துங்கள் என்பதே இச்சங்கத்தின் கோரிக்கை.இது, அவ்வளவு சிறிய அல்லது எளிதான பணி அல்ல. ஆனால், இதை செய்யாமல் தவிர்க்க முடியாது. எப்படி பள்ளி தேர்வுகளின்போது, ‘பறக்கும் படை’ செயல்படுகிறதோ, எப்படி ரயில்களில் பயணம் செய்வோரிடையே, ‘செக்கிங்’ நடைபெறுகிறதோ அப்படியாவது நடைபெற வேண்டும்.
தங்களைக் கண்காணிக்கவும், மேல்நடவடிக்கை எடுக்கவும் ஒரு அமைப்பு இருக்கிறது. அது, எப்போது வேண்டுமானாலும் புயல் போல் வந்து தாக்கலாம் என்ற அச்சமும், எச்சரிக்கையுணர்வும், பெருமளவு தவறுகள் நேராமல் காப்பாற்ற முடியும். வங்கி ஊழியர் ஆலோசனைகளை முற்றிலும் புறக்கணிக்காமல், உர்ஜித் படேல் கவனிக்க வேண்டும்.
சமாதானமா, நம்பிக்கையா?
பார்லிமென்ட் நிலைக்குழுவின் மூத்த உறுப்பினர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு, உர்ஜித் படேல் நேரடியாக பதில் அளிக்கவில்லை என்ற செய்தியும், ஊடகங்களில் கசிந்துள்ளது. புதிய திவால் சட்டம் மற்றும் வாராக்கடன்களை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலன் அளிக்க துவங்கியுள்ளன. அதனால், விரைவில் நிலைமை சீராகிவிடும் என்ற நம்பிக்கையையே உர்ஜித் படேல் வழங்கியதாக, நிலைக்குழுவில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.
உண்மையில் இத்தகைய, ‘சமாதான’ வார்த்தைகளைவிட, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பற்றிய விரிவான தகவல்களே, மக்களை நம்பிக்கை கொள்ள வைக்கும். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, இந்தியப் பொருளாதாரத்தையும், வங்கிகளையும் நிர்வகிப்பதில், ஆர்.பி.ஐ., மேற்கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தையும் படேல் எடுத்து வைத்திருக்கலாம். இனிமேல் எந்தவிதமான மோசடியும் நடைபெறாது என்பதற்கான, நிர்வாக ரீதியான பொறி அமைப்பையும் விளக்கியிருக்கலாம். வங்கி நிர்வாகத்தில் தேவைப்படுவது, வெளிப்படைத் தன்மை மட்டுமே. ஏனெனில், வங்கிகள் கையாள்வதும், நிர்வகிப்பதும் மக்களின் பணம்.
இப்போது வெளியாகியுள்ள தகவல்கள், முழு நம்பிக்கையை ஏற்படுத்துவதைவிட, ‘சமாளிப்புகளை’யே தெரிவிக்கின்றன. மக்களுக்கு தெளிவான விபரங்களை பகிர்ந்துகொள்ள கிடைத்த அரிய வாய்ப்பை, உர்ஜித் படேல் தவறவிட்டு விட்டாரோ என்ற ஐயம் எழாமலில்லை.
–ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|