பதிவு செய்த நாள்
20 ஜூன்2018
00:29
புதுடில்லி : ‘ஏர் – இந்தியா’ நிறுவனத்தை விற்பனை செய்யும் முடிவை, மத்திய அரசு கைவிட்டுள்ளது. லாப பாதைக்கு திரும்ப, மேலும் முதலீடு செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் – இந்தியா நிறுவனம், 56 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின், 76 சதவீத பங்குகளை விற்க, மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான ஏல அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இறுதி நாளான, மே, 31 வரை, ஏலம் கோரி எந்த நிறுவனமும் விண்ணப்பிக்கவில்லை.
ஏர் – இந்தியாவின் மொத்த கடனில், 24 ஆயிரம் கோடி ரூபாய் கடனை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை தான், ஏலம் தோல்வியடைய காரணம் என, கூறப்படுகிறது. இந்நிலையில், டில்லியில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள், பியுஷ் கோயல், சுரேஷ் பிரபு, நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ஏர் – இந்தியா நிறுவனத்தை விற்கும் முடிவை கைவிடுவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமீப காலமாக, ஏர் – இந்தியா நிறுவனம், சிறிதளவு லாபம் ஈட்டி வருகிறது. எந்த விமானமும் காலியாக செல்வதில்லை. அதனால், ஏர் – இந்தியாவின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்தி, இழப்பில் இருந்து லாபப் பாதைக்கு திருப்ப, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு தேவையான நிதியை ஒதுக்குவதுடன், அனைத்து ஊழியர்களையும் ஊக்குவித்து, அவர்களின் செயல்திறனை மேம்படுத்த உள்ளது.
மேலும், இரண்டு விமானங்கள் வாங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில், ஏர் – இந்தியாவில் சீர்திருத்த நடவடிக்கைகள் துவங்கும். பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளின்படி, தொடர்ந்து, மூன்று ஆண்டுகள் லாபமீட்டிய நிறுவனங்கள் மட்டுமே, பங்கு வெளியீடு மேற்கொள்ள முடியும். அதனால், ஏர் – இந்தியாவை, லாபமீட்டும் நிறுவனமாக மாற்றி, பங்கு விற்பனை மேற்கொள்வது, மத்திய அரசுக்கு அதிக ஆதாயத்தை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
‘‘டில்லி, ‘மெட்ரோ மனிதர்’ இ.ஸ்ரீதரனை, ஏர் – இந்தியா தலைவராக நியமித்து, நிறுவனத்தை லாபப் பாதைக்கு திருப்பி, அதன்பின் பங்கு விற்பனை மேற்கொள்வதே சரியாக இருக்கும்,’’ என, கோட்டக் மகிந்திரா குழும தலைவர், ஆனந்த் மகிந்திரா சமீபத்தில் கூறியிருந்தது, நினைவுகூரத்தக்கது.
ஜே.ஆர்.டி. டாட்டா முதல்...
தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாட்டா, 1932, அக்., 15ல், டாட்டா ஏர்லைன் ஸ் நிறுவனத்தை துவக்கி, முதல் விமான சேவையை மேற்கொண்டார். இந்நிறுவனம், ஏர் – இந்தியா என்ற பெயருடன், 1946, ஜூலை, 29ல் பொதுத் துறை நிறுவனமாக மாறியது. 1947ல், நாடு சுதந்திரம் அடைந்தபின், இந்நிறுவனத்தின், 48 சதவீத பங்கை, மத்திய அரசு வாங்கியது.
1953ல், விமான நிறுவனங்கள் சட்டம் மூலம், ஏர் – இந்தியாவின் பெரும்பான்மை பங்குகளை, மத்திய அரசு பெற்றது. எனினும், இந்நிறுவனத்தின் தலைவராக, 1977 வரை, ஜே.ஆர்.டி.டாட்டா இருந்தார். உள்நாட்டு விமான சேவைக்காக உருவாக்கப்பட்ட, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், 2007ல், ஏர் – இந்தியா உடன் இணைக்கப்பட்டது.
ஏர் – இந்தியா, 230க்கும் அதிகமான விமானங்கள் மற்றும், 29 ஆயிரம் பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. விமான சேவையில், இன்டிகோ, ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களை அடுத்து, 13.3 சதவீத பங்களிப்புடன், மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|