பதிவு செய்த நாள்
21 ஜூன்2018
00:13
புதுடில்லி : மத்திய அரசு, ஜி.எஸ்.டி.,யின் கீழ், பெட்ரோல், டீசலை கொண்டு வரும்போது, கூடுதலாக மாநிலங்களின் விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலகில், எந்த நாடும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு, ஜி.எஸ்.டி., மட்டும் விதிப்பதில்லை. ஜி.எஸ்.டி., உடன், ‘வாட்’ எனப்படும் மதிப்பு கூட்டு வரியும் விதிக்கப்படுகிறது. தற்போது, கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அதனால், இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஜி.எஸ்.டி., அமலுக்கு முன், ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவைக்கு எவ்வளவு வரி இருந்ததோ, அதற்கு நிகரான வரி விகிதம் தான், அவற்றை, ஜி.எஸ்.டி.,யில் சேர்க்கும் போதும் இருக்க வேண்டும். ஆனால், பெட்ரோல், டீசலுக்கான வரி, ஜி.எஸ்.டி.,யின் அதிகபட்சமான, 28 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசலுக்கு, ஜி.எஸ்.டி.,யில், 28 சதவீத வரி விதித்தால், அது, மத்திய– மாநில அரசுகளுக்கு, பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய, மத்திய அரசிடம் நிதி கிடையாது. அதனால், பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வந்தாலும், மாநில அரசுகள், விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரி விதிக்க, மத்திய அரசு ஒப்புதல் அளிக்கலாம்.
அதேசமயம், இந்த வரி விதிப்பு, தற்போதைய அளவை விட அதிகமாக இருக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்படலாம். எனவே, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வந்தாலும், அவற்றின் தற்போதைய விலையில் மாற்றம் ஏதும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|