பதிவு செய்த நாள்
24 ஜூன்2018
01:08
கோவை: ‘இந்திய சந்தையில் செம்பு உலோகத்தின் விலை உயர்ந்திருப்பதால், கோவையில் உற்பத்தியாகும் மோட்டார் பம்ப் செட் விலை, 10 சதவீதம் வரை உயரும்’ என, உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர். நாட்டில், 50 சதவீத மோட்டார் பம்ப் செட்கள் கோவையில் உற்பத்தியாகின்றன. இங்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர மோட்டார் பம்ப் செட் மற்றும் உதிரிபாகம் உற்பத்தி நிறுவனங்கள், 3,000 உள்ளன. 0.5 எச்.பி., முதல், 20 எச்.பி., வரை, 100க்கும் மேற்பட்ட மாடல்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இறக்குமதி : இந்த மோட்டார் பம்ப் செட்டுகளில், ‘காயில் வைண்டிங்’ செய்ய செம்பு தான் மூலப்பொருள். இதில், ரோட்டார் மற்றும் ஸ்டேட்டார் எனும் சுழலும் காந்த அலைத் தகடுகள் செம்பால் தான் செய்யப்படுகின்றன. இதேபோல், அலுமினியம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கார்பன் போன்ற மூலப்பொருட்களும் தேவைப்படும். குறிப்பாக, ‘சப்மெர்சிபிள் பம்ப்’ எனும் நீர்மூழ்கி மோட்டார் பம்ப் செட்டில், 70 சதவீதம் வரை செம்பு தேவைப்படும்.இவை பிர்லா, டொமினோ மற்றும் ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களால், இந்தியச் சந்தையில் கிடைத்து வந்தது. கொரியா, வியட்னாம் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை இந்தியச் சந்தையில், செம்பு கிலோ, 500 முதல், 600 ரூபாய் வரை கிடைத்தது. பின், 575 ரூபாய் என்றானது. கடந்த வாரம் விலை கிலோவுக்கு, 20 வரை உயர்ந்து, 595 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், மோட்டார் பம்ப் செட்களின் விலை உடனடியாக, 10 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது. தற்போது, 1 குதிரைத் திறன் (எச்.பி.,) நீர்மூழ்கி மோட்டார் பம்ப், 7,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. 5 எச்.பி., விலை, 17 ஆயிரமாகவும், 0.5 எச்.பி., செல்ப் பிரேமிங் மோட்டார் பம்ப் செட், 1,500 ரூபாய் வரையும் விற்பனையாகின்றன.
வரி குறைப்பு : கோவை குறு, சிறு, மோட்டார் பம்ப் செட் மற்றும் உதிரிபாகம் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது: மத்திய அரசு, பொருள் குவிப்பு தடுப்பு வரி என்ற பெயரில், 20 சதவீத வரி விதிக்கிறது. மூலப்பொருட்களின் விலையை நிலையாக வைத்திருக்க, இது போன்ற இறக்குமதி வரிகளை குறைக்க வேண்டும். செம்பு விலை உயர்வால், 10 சதவீதம் வரை பம்ப் செட் விலை உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|