பதிவு செய்த நாள்
02 ஜூலை2018
01:15
‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற முழக்கத்தோடு, கடந்த ஆண்டு, ஜூலை, 1ல், சரக்கு மற்றும் சேவை வரி, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஓராண்டு முடிந்த நிலையில், இன்னும் செய்யப்பட வேண்டியவை என்னென்ன?
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இருந்த, 17 வரிகளை ஒருங்கிணைத்து, சென்ற ஆண்டு, ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய வரி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற, எண்ணம் தோன்றியது. 2017ல் தான் அது நடைமுறைக்குவந்தது.
பல்வேறு குழப்பங்கள்
வழக்கம்போல், ஆரம்பத்தில் ஏராளமான பிரச்னைகள். இத்தனை வரி அடுக்குகள் எதற்கு? ஒற்றை வரி விதிப்பாக ஏன் இல்லை? 28 சதவீதம் வரை வரி எதற்கு? அதிகபட்சம், 18 சதவீதம் இருந்தால் போதாதா? என்றெல்லாம் விவாதங்கள் நடைபெற்றன. மற்றொரு புறம், ஜி.எஸ்.டி., அறிமுகமான பின், தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு குழப்பங்கள். ரிட்டர்ன்ஸ் பைல் செய்ய முடியவில்லை; ரீபண்டு கிடைக்கவில்லை; அதனால், தொழில் நடத்துவதற்கான கையிருப்பு மூலதனம் அதிகமாகத் தேவைப்படுகிறது என்ற, குறைகளும் சொல்லப்பட்டன.இவையெல்லாம் படிப்படியாக கடந்த ஓராண்டில் ஓரளவுக்கு சீர்பட்டுள்ளது. ‘ரிட்டர்ன்ஸ்’ பைல் செய்வதற்கான படிவங்கள் மாற்றியமைக்கப்பட்டன; கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ரீபண்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேல், ஜி.எஸ்.டி., கவுன்சில் ஒவ்வொரு முறை கூடும்போதும், பல பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்தது; அல்லது குறைந்த வரி அடுக்கில் அவை மாற்றியமைக்கப்பட்டன.எந்த புதிய விஷயத்தை தொடங்கினாலும், இத்தகைய ஆரம்ப இடையூறுகள் இருக்கவே செய்யும். அதற்கு உடனடியாக தீர்வுகள் காண்பதில் ஒருவித அவசரத் தன்மை தேவை. அதை மத்திய, மாநில அரசுகளின் உறுப்பினர்களைக் கொண்ட, ஜி.எஸ்.டி., கவுன்சில் சிரமேற்கொண்டு சிறப்பாகச் செயல்படுத்தியது.இனி, ஜி.எஸ்.டி., 2.0 வரவேண்டும். அதாவது, அடுத்த கட்ட நடவடிக்கைகள்.இதுவரை, ஜி.எஸ்.டி.,க்குள் சேர்க்கப்படாத பொருட்கள், சேவைகள் என்னென்னவோ, அவற்றை அதற்குள் கொண்டுவர வேண்டும். முக்கியமாக மின்சாரம், மதுவகைகள், பெட்ரோலியப் பொருட்கள், ரியல் எஸ்டேட் ஆகியவை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் இல்லை. இதில் இயற்கை எரிவாயுவையும், விமானங்களுக்கான எரிபொருளையும் உடனடியாக, ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வரலாம்.பெட்ரோல், டீசலைக் கொண்டு வருவதற்கு மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளாது. இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியே பல மாநில அரசுகள் செயல்படுகின்றன. மனை வணிக தொழிலையும், ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டுவரலாம். ஆனால், அதற்கும் பெரிய எதிர்ப்பு இருக்கும்.ஆனால், மேலே குறிப்பிட்ட துறைகளில் தான் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது. இதில் இருந்து பெறப்படும் வரிவருவாய், மொத்த, ஜி.எஸ்.டி., வருவாயைப் பலமடங்கு உயர்த்தும் என்பது நிச்சயம்.தற்போது, ஆறு வரி அடுக்குகள் உள்ளன. இதில், 12 சதவீதம் மற்றும், 18 சதவீதம் அடுக்கில் தான் பெரும்பாலான பொருட்களும்,சேவைகளும் உள்ளன. வரிவருவாய் நிலைபெற்ற பின், மக்கள் மீது கருணை கொண்டு, அரசாங்கம், 5 சதவீதம் மற்றும், 12 சதவீதம் அடுக்கில் அனைத்துப் பொருட்களையும் மாற்றித் தரவேண்டும். 18 சதவீதம் என்பதே ரொம்பவும் அதிகம்.இதில், 28 சதவீதம் கூடவே கூடாது. சிமென்ட், பெயின்ட், ஏ.சி., மெஷின், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்றவற்றையெல்லாம், இன்று யாரும் ஆடம்பரப் பொருட்களாகப் பார்ப்பதில்லை. அவையும் அத்தியாவசிய குடும்பத் தேவைகளாகிவிட்டன. இந்நிலையில், இவற்றை, 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாகவாவது குறைக்க வேண்டும். சென்ற ஆண்டில் இருந்து தொடரும் இரண்டு முக்கிய பிரச்னைகளில் ஒன்று, உள்ளீட்டு வரி மற்றும் ரீபண்டு பெறுவது. பலன் அனுபவித்தனரா?தொழில்நுட்பச் சிக்கல்களால் ஏற்பட்ட தாமதங்கள் இன்னும் தொடர்கின்றன. இதனைச் செம்மைப்படுத்த வேண்டும். இரண்டாவது பிரச்னை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,க்கு பதிவு செய்து கொண்டு, அதன் நடைமுறைகளைப் பின்பற்றுவதில் திண்டாடுகின்றன.படிவங்களையும், இன்னபிற ஆவண சமர்ப்பிப்புகளையும்,அரசாங்கம் மேலும் எளிமைப்படுத்தித் தர வேண்டும்.அரசாங்கம் எதிர்பார்த்ததுபோன்றே, முறைசாரா தொழில்களில் இருந்தவர்கள் கூட, ஜி.எஸ்.டி.,யின் பயனை உணர்ந்து கொண்டு, முறையான தொழிலகங்களாக மாற்றிக்கொண்டு இருக்கின்றனர். இதனால், வரி செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாகப் பெருகியுள்ளது. வரி செலுத்துவதில் உள்ள நடைமுறைகள் மேலும் எளிமையாகுமானால், மேலும் பல நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,க்குள் வந்துவிடும் வாய்ப்பு அதிகம்.கொள்ளை லாபம் ஈட்டுவதைத் தடுப்பதைக் கண்காணிக்கும் அமைப்பு, உருவாக்கப்பட்டது. அது, இரண்டு ஆண்டுகள் வரை செயல்படும் என, சொல்லப்பட்டது. அதன் ஆயுட்காலம் இன்னும் நீட்டிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படலாம். ஏனெனில், இன்றுகூட பல இடங்களில், அதிகபட்ச சில்லறை விலையின் மீது, ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படும் சம்பவங்கள் தெரிய வருகின்றன. இவற்றையெல்லாம் தடுக்க வேண்டியது அவசியம்.புதிய வரி விதிப்பினால், அரசாங்கத்தின் வருவாய் குறைந்துபோகலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஜி.எஸ்.டி., அறிமுகத்துக்கு முன், ஆண்டு ஒன்றுக்கு மறைமுக வரி வருவாய் சுமார், 12 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது, மாதத்துக்குச் சராசரியாக, 1 லட்சம் கோடி வரிவருவாய் இருந்தது. ஜி.எஸ்.டி., அமலான பின், ஏப்ரல், 2018 வரையான, ௧௦ மாத காலத்தில், சராசரியாக மாதம் ஒன்றுக்கு, 89 ஆயிரம் கோடி வருவாய் மட்டுமே ஈட்டப்பட்டது. இதில் பெட்ரோலிய பொருட்கள், மனை வணிகம்,மது வகைகள் ஆகியவை சேர்க்கப்படவில்லை. அடுத்து வரும் மாதங்களில் இந்த வருவாய் உயர்ந்துவிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜி.எஸ்.டி., பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணம், இதனால் பொய்த்துப் போகக்கூடும்.தொழில் துறையினருக்கும் அரசாங்கத்துக்கும் சந்தோஷம். மக்களுக்கு சந்தோஷமா? பல இடங்களில் செய்யப்பட்ட வரிக் குறைப்பு, உள்ளீட்டு வரி ஆகியவற்றின் பலனை மக்கள் அனுபவித்தனரா என்றால்... நிச்சயம் இல்லை.
மாதாந்திர மளிகை சாமான் செலவுகள் குறையவில்லை. வெளியே ஓட்டல்களின் சாப்பிட முடியவில்லை. அலைபேசி பில்கள் முதற்கொண்டு பல்வேறு அத்தியாவசிய சேவைகளில் கூட பெரிய பலன் இல்லை.ஜி.எஸ்.டி., 2.0, மக்களைமகிழ்விக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்!
ஆர்.வெங்கடேஷ் பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|