பதிவு செய்த நாள்
03 ஜூலை2018
01:09
புதுடில்லி:இந்தாண்டில், இதுவரை இல்லாத அளவிற்கு, ஜூன் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, மிக வேகமாக உயர்ந்திருப்பது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.நாட்டின் தயாரிப்புத் துறை வளர்ச்சி குறித்து, நிக்கி – மார்க்கிட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:தயாரிப்பு துறை, நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – ஜூன் வரையிலான முதல் காலாண்டை, சிறப்பான வளர்ச்சியுடன் பூர்த்தி செய்துள்ளது. இத்துறையின் வளர்ச்சி விகிதம், ஜூன் மாதத்தில் மிக அதிகமாக இருந்தது.
தயாரிப்பு பொருட்களுக்கு, அதிக அளவில் தேவைப்பாடு காணப்பட்டதால், இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.வேலைவாய்ப்புமேலும், 2017 டிசம்பர் முதல், தயாரிப்பு துறை நிறுவனங்களுக்கு புதிய, ‘ஆர்டர்’கள் கிடைப்பதும் அதிகரித்துள்ளது. அதனால், ஆர்டர்களுக்கு ஏற்ப, பொருட்களை விரைவாக சப்ளை செய்வதற்காக, நிறுவனங்கள் அதிக ஆட்களை பணிக்கு அமர்த்தின.கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவாக, தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பும், ஜூனில் உயர்ந்து, உற்பத்தி அதிகரிக்க வழி வகை செய்துள்ளது.
அதனால், ஜூன் மாதம், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.எம்.,- – பி.எம்.ஐ., குறியீடு, 53.1 புள்ளியாக அதிகரித்துள்ளது. இது, மே மாதம், 51.2 புள்ளி; ஏப்ரலில், 51.6 புள்ளி என்ற அளவில் இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளிகளை தாண்டினால், அது வளர்ச்சியை குறிக்கும். இதன்படி, தயாரிப்பு துறை, தொடர்ந்து, 11 மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது.ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, ஜூன் மாதம் உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, நிலவி வந்தது.அதனால், 2014 ஜூலைக்கு பின், தயாரிப்பு துறைக்கான மூலப் பொருட்கள் பணவீக்கம், மிக அதிகமாக உயர்ந்தது.மூலப் பொருட்கள் செலவினம் உயர்ந்த போதிலும், அதற்கு நிகராக, உற்பத்தி பொருட்கள் விலையை தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தி, சமாளித்து வருகின்றன.
சவால்
இதனிடையே எதிர்பார்த்தபடி, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, ஜூன் 6ல், ரெப்போ வட்டியை, 0.25 சதவீதம் உயர்த்தி, 6.25 சதவீதமாக நிர்ணயித்தது. சில்லரை பணவீக்க இலக்கையும், 0.30 சதவீதம் உயர்த்தியது.அதிகரித்து வரும் சில்லரை பணவீக்கமும், அதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுக்கும் பொருளாதார கொள்கையின் நிலைப்பாடும், நடப்பு நிதியாண்டில், தயாரிப்பு துறைக்கு சவாலான விஷயங்களாக இருக்கும் எனலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை உயர்வால், பிப்ரவரிமுதல், தயாரிப்பு நிறுவனங்களின் மூலப்பொருட்கள் செலவினம் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, தயாரிப்பு பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. நம் நாடு, கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்கிறது.இந்நிலையில், ஈரானுக்கு அமெரிக்கா விதித்துள்ளபொருளாதார தடையால், கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|