பதிவு செய்த நாள்
04 ஜூலை2018
00:24
புதுடில்லி:மும்பை பங்குச் சந்தை பட்டியலில் இருந்து, 222 நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாக, மும்பை பங்குச் சந்தை அறிவித்துள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்றத்திற்காக உருவாக்கப்படும் போலி நிறுவனங்கள் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த வகையில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக செயல்படாமலும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்காமலும் இருந்த, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.அத்துடன், சந்தேகத்தின்பேரில், மேலும், இரண்டு லட்சம் போலி நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றின்மீதான நடவடிக்கை விரைவில் துவங்கும் என, தெரிகிறது.
நடவடிக்கை
இந்நிலையில், பங்கு சந்தையில் போலி நிறுவனங்களை களையெடுக்கும் பணியை, ‘செபி’ முடுக்கி விட்டுள்ளது.கடந்த ஆண்டு, போலி நிறுவனங்கள் என்ற சந்தேகத்தின் பேரில், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள, 331 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பங்குச் சந்தைகளுக்கு, ‘செபி’ உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அந்நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்திற்கு, மும்பை பங்குச் சந்தை, தடை விதித்தது. இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு மேலாக பங்கு வர்த்தகம் நடைபெறாமல் உள்ள நிறுவனங்களை, பங்குச் சந்தையில் இருந்து, கழற்றி விடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, மும்பை பங்குச் சந்தை வெளியிட்டுஉள்ள அறிக்கை:
பங்குச் சந்தை பட்டியலில் இருந்து நிறுவனங்களை நீக்குவது குறித்து விசாரிக்கும் குழு, அதன் பரிந்துரையை வழங்கி உள்ளது.அதன்படி, தடை காரணமாக, ஆறு மாதங்களுக்கு மேலாக பங்கு வர்த்தகம் நடைபெறாமல் இருந்த, 200 நிறுவனங்கள், மும்பை பங்குச் சந்தை பட்டியலில் இருந்து, மே மாதம் நீக்கப்பட்டன.இதேபோல தடை விதிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு மேலாக பங்கு வர்த்தகம் புரியாமல் இருந்த, 210 நிறுவனங்கள், தற்போது பங்குச்சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன.
மும்பை பங்குச் சந்தை பட்டியலில் இருந்து, இந்த நிறுவனங்கள், இன்று நீக்கப்படும்.இதே நாளில், தேசிய பங்குச் சந்தையில் இருந்து கட்டாய நீக்கத்திற்கு ஆளான,ஏஷியன் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட, 6 நிறுவனங்களும், மும்பை பங்குச் சந்தை பட்டியலில்இருந்து இன்று நீக்கப்படும்.
நம்பகத்தன்மை
இவை தவிர, மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துவக்கியுள்ள, எம்.எம்.எஸ்., இன்ப்ராஸ்ட்ரக்சர், ஒயாசிஸ் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட, 6 நிறுவனங்களும், பங்குச் சந்தை பட்டியலில் இருந்து விலக்கி வைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வரும் மாதங்களில், மும்பை பங்குச் சந்தையின் இந்த களையெடுப்பு தீவிரமாகும் என தெரிகிறது. இதனால், போலி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து ஏமாறுவது தடுக்கப்படும்.
பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்கள் குறித்த நம்பகத்தன்மை அதிகரிக்கும். இது, பங்கு முதலீடுகள் பெருக வழி வகுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய பங்குச் சந்தையிலும்...
தேசிய பங்குச் சந்தையில் இருந்து, ஏஷியன் எலக்ட்ரானிக்ஸ், பிர்லா பவர் சொல்யூஷன்ஸ், கிளாசிக் டையமண்ட்ஸ், இன்னோவென்டிவ் இண்டஸ்ட்ரீஸ், பாரமவுண்ட் பிரின்ட் பேக்கேஜிங், எஸ்.வி.ஓ.ஜி.எல்., ஆயில் கேஸ் அண்டு எனர்ஜி ஆகிய ஆறு நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|