பதிவு செய்த நாள்
10 ஜூலை2018
06:24
புதுடில்லி:இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் பண்டுகளுக்கு, 33 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளன. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 15 சதவீதம் அதிகம்.
‘கடந்த ஆண்டு, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்டுகளுக்கு, 28 ஆயிரத்து, 332 கோடி ரூபாய் மட்டுமே வந்தது. ‘தற்போது, சிறு நகரங்களில் உள்ள சிறு முதலீட்டாளர்கள், மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், இந்த அளவுக்கு முதலீடு பெருகியுள்ளது’ என்கிறது, ‘ஆம்பி’ எனப்படும், இந்திய மியூச்சுவல் பண்டுகளின் கூட்டமைப்பு.
இது தொடர்பாக, ஆம்பியின் தலைமை நிர்வாகியான, என்.எஸ்.வெங்கடேஷ் கூறியதாவது:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யின் வழிகாட்டுதலின்படி, ஆம்பி மேற்கொண்ட மியூச்சுவல் பண்டு விழிப்புணர்வு பிரசாரத்தால், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.அவர்கள் மியூச்சுவல் பண்டை நல்லதொரு முதலீட்டு வாய்ப்பாக பார்க்க ஆரம்பித்துள்ளனர்.சமீபத்திய ஏற்ற, இறக்கங்களை மீறி, மியூச்சுவல் பண்டுகளுக்கு வரும் தொகை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே நாங்கள் நம்புகிறோம்.
குறிப்பாக, இந்தியாவில் உள்ள, 30 சிறுநகரங்களில் இருந்து, எஸ்.ஐ.பி., எனும் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் வழியாக, சிறு முதலீட்டாளர்கள் ஏராளமாக பங்கு பெற்று வருகின்றனர்.பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளுக்கு வரும் முதலீடுகள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நடப்பாண்டில், பங்குச்சந்தைகளில் தடுமாற்றம் தெரிந்தாலும், மக்கள் நீண்ட கால பார்வையோடு, பங்குகளில் முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் பண்டுகளை அணுகி வருகின்றனர்.குறிப்பாக, தற்போது மாதாந்திர, எஸ்.ஐ.பி., மூலம், 7,300 கோடி ரூபாய் வருகிறது. அடுத்து வரும் மாதங்களில், இந்தத் தொகை உயரவே வாய்ப்புள்ளது.
நீண்ட கால அளவில், பங்குச் சந்தை முதலீடுகளால் நிலையான சொத்துகளை உருவாக்க முடியும் என, சிறு முதலீட்டாளர்கள் நம்புவதே இதற்கு காரணம்.இந்த முதல் காலாண்டில், ஏப்ரல் மாதத்தில், 12 ஆயிரத்து, 409 கோடி ரூபாயும்; மே மாதத்தில் 12 ஆயிரத்து, 70 கோடி ரூபாயும்; ஜூன் மாதத்தில், 8,237 கோடி ரூபாயும்; ஆகமொத்தம், 32 ஆயிரத்து, 716 கோடி ரூபாய், பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல்பண்டுகளுக்கு வந்து சேர்ந்துள்ளது.
இந்த காலாண்டில், பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்கள் சார்ந்த ஒட்டுமொத்த மியூச்சுவல் பண்டுகளுக்கு, 1.4 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. ஜூன் இறுதி நிலவரப்படி, மியூச்சுவல் பண்டுகளுக்கு வந்துள்ள மொத்த தொகை, 7.86 லட்சம் கோடி ரூபாய், கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் திரட்டப்பட்ட மொத்த தொகை, 5.91 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.நடப்பு ஆண்டில் ஜூனுடன் முடிந்த காலகட்டத்தில் மட்டும், மியூச்சுவல் பண்டுகளில் திரட்டப்பட்டுள்ள தொகை, 33 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|