பதிவு செய்த நாள்
11 ஜூலை2018
00:43
புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் துணை நிறுவனம் மூலம், 15 நகரங்களில், வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் காஸ் சப்ளை செய்ய, உரிமம் கோரியுள்ளது. இதன் மூலம், முதன் முறையாக, எரிவாயுவின் சில்லரை விற்பனையிலும், ரிலையன்ஸ் கால் பதிக்கிறது.
மத்திய அரசு, வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ் சப்ளை செய்யும் திட்டத்தை, பரவலாக விரிவுபடுத்தி வருகிறது.
இலக்கு
குழாய் மூலம் சமையல் காஸ் பயன்படுத்தும் இல்லங்களை, தற்போது உள்ளதை விட, மூன்று மடங்கு உயர்த்தி, 2020ல், 1 கோடியாக அதிகரிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளது.தவிர, அடுத்த சில ஆண்டுகளில், எரிபொருள் பயன்பாட்டில், இயற்கை எரிவாயுவின் பங்கை, தற்போதைய, 6 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, குழாய் மூலம் இல்லங்களுக்கு காஸ் சப்ளை செய்வது; வாகனங்களுக்கான, சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை காஸ் விற்பனை ஆகியவற்றுக்கு ஏலம் மூலம் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை, எட்டு முறை நடைபெற்ற ஏலத்தில், 91 பகுதிகளுக்கு, இயற்கை காஸ், சி.என்.ஜி., சப்ளை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதை, இந்திரபிரஸ்தா காஸ், கெயில் உள்ளிட்ட நிறுவனங்கள் பெற்று, காஸ் சப்ளையில் ஈடுபட்டு உள்ளன.
தமிழகம்
இந்நிலையில், 9வது ஏலத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், தமிழகம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில், 86 பகுதிகளில், குழாய் மூலம் காஸ் சப்ளை மற்றும், சி.என்.ஜி., விற்பனைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் துணை நிறுவனமான, இந்தியா காஸ் சொல்யூஷன்ஸ் மூலம், 15 நகரங்களில், குழாய் மூலம் காஸ் சப்ளை செய்யும் உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளது.இதன் மூலம், ரிலையன்ஸ், காஸ் சில்லரை விற்பனையிலும் கால் பதிக்கிறது.
இந்தியா காஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில், பிரிட்டனைச் சேர்ந்த, பி.பி., நிறுவனம், 50 சதவீத பங்கை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்திரபிரஸ்தா காஸ் நிறுவனம், 13 நகரங்களுக்கும், எஸ்ஸெல் இன்ப்ராபுராஜெக்ட்ஸ், 7 நகரங்களுக்கும், உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளன.நேற்றுடன், விண்ணப்ப காலம் முடிவடைந்தது. ‘இந்த ஏலம் மூலம், 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் குவியும்’ என, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம், தெரிவித்துள்ளது.
சேலம் – கோவை
குழாய் மூலம் வீடுகளுக்கு காஸ் வினியோகிக்கும் உரிமத்திற்கான விதிமுறைகள், சீரமைக்கப்பட்டுள்ளன.உரிமம் வழங்கப்பட்டதில் இருந்து, எட்டு ஆண்டுகளுக்கு அளிக்க வேண்டிய காஸ் அளவு, 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.முந்தைய ஏலங்களில், போட்டி காரணமாக, நிறுவனங்கள், ஒரு யூனிட் எரிவாயுவிற்கு, 1 பைசா என, வழங்க முடியாத விலையை குறிப்பிட்டன. இதை தவிர்க்க, 1 கிலோ சமையல் எரிவாயுவிற்கு, 30 ரூபாய்; சி.என்.ஜி.,க்கு, 2 ரூபாய் என, அடிப்படை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில், தமிழகத்தில், சேலம் மற்றும் கோவை மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|