பதிவு செய்த நாள்
15 ஜூலை2018
01:03
திருப்பூர்: நடப்பு நிதியாண்டு, முதல் காலாண்டில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 14.22 சதவீதம் சரிவடைந்துள்ளது.
ஜி.எஸ்.டி.,யை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, ஆடை ஏற்றுமதிக்கு வழங்கப்பட்ட, டியூட்டி டிராபேக், ஸ்டேட் லெவிஸ் உட்பட சலுகை விகிதத்தைக் குறைத்தது.
இதனால், ஜி.எஸ்.டி.,க்குப்பின், 2017, அக்., முதல், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவடையத் துவங்கி விட்டது. 2016- –- 17 நிதியாண்டில், ஒரு லட்சத்து, 16 ஆயிரத்து, 508 கோடி ரூபாயாக இருந்த ஆடை ஏற்றுமதி, 2017 –- 18ல், ஒரு லட்சத்து 7,678 கோடியாக சரிந்தது.
பாதிப்பு விலகி, நடப்பு 2018-- – 19 நிதியாண்டில், ஏற்றுமதி வளர்ச்சி பெறும் என, எதிர்பார்க்கப்
பட்டது. மாறாக, இந்த நிதியாண்டிலும், ஆடை ஏற்றுமதி சரிவை நோக்கியே செல்கிறது. 2017 –- 18 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள்), 31 ஆயிரத்து, 594 கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்தது.
நடப்பு நிதியாண்டில், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், ஏற்றுமதி வர்த்தகம், 27 ஆயிரத்து, 102 கோடி ரூபாயாக, 14.22 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்சங்க பொதுச்செயலர் விஜயகுமார் கூறியதாவது: ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வருகிறது. ஜி.எஸ்.டி.,க்குப்பின், வழங்கப்பட்டு வந்த, 13 சதவீத சலுகையில், 5.3 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. நுால் விலை, ஜாப்
ஒர்க் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதனால், வர்த்தகப் போட்டிகளை எதிர்கொண்டு, ‘ஆர்டர்’களை பெறுவதில், நம் நாட்டு ஏற்றுமதியாளர்களுக்குச் சிக்கல் தொடர்கிறது.
நாடு முழுவதும், நேரடியாகவும், மறைமுகமாகவும், 35 லட்சம் தொழிலாளர்கள், ஆயத்த ஆடை துறை சார்ந்த, வேலை வாய்ப்பு பெறுகின்றனர்; வர்த்தக வீழ்ச்சியால், 10 சதவீத தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.ஏற்றுமதி நிறுவனங்களின் லாபம் குறைந்து, நஷ்டத்தை நோக்கியே எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.மத்திய அரசு, உடனடியாக சிறப்புச் சலுகைகளை அறிவித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையை சரிவில் இருந்து மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|