பதிவு செய்த நாள்
17 ஜூலை2018
23:17
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, சில வங்கிகளின் நிதி நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசு, மறு பங்கு மூலதன திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க உள்ளது.
வங்கிகள், ‘ஏ.டி1’ எனப்படும் அதிக வட்டி விகிதம் உள்ள கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்டிக் கொள்கின்றன. இந்நிலையில், அதிகரித்துள்ள வாராக் கடனுக்கு ஏற்ப, அதிக நிதி ஒதுக்கீடு செய்ததால், பல வங்கிகள் இழப்பை சந்தித்துள்ளன.
அதிக நிதி :
இதன் காரணமாக, வங்கிகள், அவற்றின் வருவாயில் இருந்து, கடன் பத்திரங்களுக்கு வட்டி அளிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இவ்வாறு, வட்டிக்கு அதிக நிதி ஒதுக்கும்பட்சத்தில், வங்கிகளின் மூலதன இருப்பு விகிதம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள வரம்பை விட குறையும். இதனால், வங்கிகள் விதிமீறல் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். இந்த பிரச்னைக்கு தீர்வாக, மத்திய அரசு, மறு பங்கு மூலதன திட்டத்தின் கீழ், நான்கு அல்லது ஐந்து வங்கிகளுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க உள்ளது.
மறு பங்கு மூலதனம் :
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுத் துறையைச் சேர்ந்த சில வங்கிகள், கடன் பத்திர வட்டி செலவினம் காரணமாக, நிதிப் பற்றாக்குறையை சந்தித்து உள்ளன. அவற்றுக்கு, மத்திய அரசு, மறு பங்கு மூலதன திட்டம் மூலம், 8 – 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும். இதன்படி, பஞ்சாப் நேஷனல் பேங்க், கார்ப்பரேஷன் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா உட்பட, நான்கு அல்லது ஐந்து வங்கிகள், அடுத்த சில தினங்களில் மத்திய அரசின் நிதியுதவியை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளின் நிதியாதாரத்தை மேம்படுத்த, 2017 அக்டோபரில், மறு பங்கு மூலதன திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அப்போது, இத்திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகளுக்கு, அடுத்த இரண்டு நிதியாண்டுகளில், 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். இதில், மறு பங்கு மூலதன கடன் பத்திர வெளியீடுகள் மூலம், மத்திய அரசின் பங்காக, 1.35 லட்சம் கோடி ரூபாய் அளிக்கப்படும். எஞ்சிய, 58 ஆயிரம் கோடி ரூபாய், வங்கிகள், பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டிக் கொள்ளும் என, தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, மத்திய அரசு ஏற்கனவே, பொதுத் துறை வங்கிகளுக்கு, கடன் பத்திரங்கள் மூலம், 71 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. எஞ்சிய தொகையில், தற்போது, 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாராக் கடன் :
பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன், 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதனால், வங்கிகள், வாராக் கடனுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க, வங்கிகள், பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளன. பொதுத் துறையைச் சேர்ந்த, 21 வங்கிகளில், 13 வங்கிகளின் இயக்குனர் குழுக்கள், பங்கு வெளியீட்டிற்கு அனுமதி அளித்துள்ளன. இந்த வகையில், வங்கிகள், 50 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|