பதிவு செய்த நாள்
22 ஜூலை2018
23:35
சென்ற நிதியாண்டில், இந்தியாவுக்கு வந்த அன்னிய நேரடி முதலீடுகளின் அளவு, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவு. ஏன் இந்த சரிவு? இந்தியாவில் முதலீடு செய்வதில் ஏன் சுணக்கம்?
அன்னிய முதலீடுகளை வரவேற்பதில், இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. முதலீடுகளை ஈர்ப்பதில் நாம் உலக அளவில் முதல், 10 இடங்களுக்குள் இருக்கிறோம். காப்பீடு, பாதுகாப்பு, சில்லரை வணிகம் உட்பட, 15 துறைகளில் நாம் அன்னிய முதலீடுகளுக்கு அனுமதி அளித்துள்ளோம்.ஒரு சில துறைகளில், 49 சதவீதம் முதல், வேறு சில துறைகளில், 100 சதவீதம் வரை அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதனால், உள்நாட்டு தொழில் முயற்சிகள் பெருகும், வளர்ச்சி மேம்படும், வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதே நம் எதிர்பார்ப்பு. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு கூடுதலாக அன்னிய முதலீடுகளை ஈர்க்கிறோம் என்பது கவனமாக பார்க்கப்படுகிறது. இதில் ஏதேனும் சுணக்கம் தென்படுமானால், அது மிகவும் கவலையளிக்கிறது. 2017 – ---18ம் ஆண்டில், அப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, இந்தியாவுக்குள் வந்த அன்னிய முதலீடுகளின் வளர்ச்சி, வெறும், 3 சதவீதம் மட்டுமே. அதாவது மொத்தம், 44.85 பில்லியன் டாலர்களே வந்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டு களில் பார்த்தால், இந்தியாவுக்கு வந்த முதலீடுகள் ஒவ்வொரு ஆண்டும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதாவது, 8.67 சதவீதம், 29 சதவீதம், 27 சதவீதம் என தொடர்ச்சியான வளர்ச்சி. 2013- – 14ல், 8 சதவீத வளர்ச்சி ஏற்பட்டது. அதனோடு ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு, வெறும், 3 சதவீத வளர்ச்சி தான் எனும்போது லேசாக அதிர்ச்சி ஏற்படவே செய்கிறது.
என்னென்ன துறைகள்?
சென்ற ஆண்டு வந்த முதலீடுகளும், விரிவாக எல்லா துறைகளுக்கும் வந்தது போல் தெரியவில்லை. சேவை துறை, கணினி மென்பொருள், வன்பொருள் துறை, தொலைதொடர்பு துறை, வர்த்தகம், கட்டுமானம், ஆட்டோமொபைல், மின்சாரம் ஆகிய துறைகளுக்கே அதிக முதலீடுகள் வந்துள்ளன. இவையும், மொரீஷியஸ், சிங்கப்பூர், நெதர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தே வந்துள்ளன.
இதில் மொரீஷியஸ் என்பது பின்வாசல் வழி. அங்கேயிருந்து வந்த முதலீடுகள், உண்மையில் அன்னிய முதலீடு கள் தானா என்ற சந்தேகம் உண்டு. அவை, இந்தியர்களின் பணமாகவும் இருக்கலாம் என்பது சந்தேகத்துக்கு இடமானது. மொரீஷியசை விட்டுவிட்டுப் பார்த்தால், மற்ற நாடுகள், இந்தியாவில் முதலீடு செய்ய போதுமான ஆர்வம் காட்ட வில்லையோ என்ற எண்ணமே மேலெழுகிறது.
அன்னிய நேரடி முதலீடுகளைப் பெறுவதில் சென்ற ஆண்டும் முதல் இடத்தில் இருந்தது மஹாராஷ்டிரா தான். இத்தனைக்கும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு, மஹாராஷ்டிரா பெற்றுள்ள முதலீடுகள், 32 சதவீதம் குறைவு.
ஆந்திராவுக்கு வந்த முதலீடு, 43 சதவீதம் சரிந்திருக்க, குஜராத்துக்கு வந்ததோ, 38 சதவீதம் குறைவு. ஆனால், எப்போதும் இல்லாத அதிசயமாக, கர்நாடகத்துக்கு வந்த முதலீடு மட்டும், 300 சதவீதம் பெருகியுள்ளது. 2016 – -17ல், 2.1 பில்லியன் டாலராக இருந்த முதலீடு, 2017- – 18ல், 8.6 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் என்ன?
இந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி இல்லை; வருவாய் ஈட்ட முடியவில்லை. உள்கட்டுமானப் பிரச்னைகளும், அரசு சார் சட்ட நெறிமுறைப் பிரச்னைகளும் இந்தச் சுணக்கம் ஏற்பட ஒரு காரணமாக இருக்கலாம் என்பது நிபுணர்கள் கருத்து. ஆனால், எந்த அன்னிய முதலீட்டு நிறுவனமும் வெளிப்படையாக இதைத் தெரிவிக்கவில்லை. இதைவிட முக்கியமாக, சர்வதேச காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்ந்து வருகின்றன. அங்கே வளர்ச்சி படிப்படியாக மேம்பட்டுள்ளது முக்கிய காரணம். இதேபோல், பல வளர்ந்த நாடுகள் தரக்கூடிய முன்னேற்றமும் கவர்ச்சிகரமாக இருக்கின்றன.
மேலும், இந்தியாவில் உள்ள இரண்டு பிரச்னைகள், அன்னிய முதலீட்டாளர்களை கவலைகொள்ள வைத்துள்ளன. கச்சா எண்ணெய் விலையேற்றமும், அதனால் ஏற்பட்டுள்ள நடப்பு கணக்குப் பற்றாக்குறையும், தொடர்ச்சியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அதில் முக்கியமானது, ரூபாயின் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள். இவையெல்லாம் ஒருவிதமான சமச்சீரற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதால், லாபம் ஈட்ட நினைக்கும் நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளைத் தள்ளிப் போடுகின்றன.
நம் கவனத்தைக் கவரும் இன்னொரு விஷயம், அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப எடுத்துக்கொண்டு போகும் மூலதனம். ஐந்து ஆண்டுகளில், திரும்ப எடுத்துக்கொண்டு போகும் தொகையும் அதிகமாகியுள்ளது. அதாவது, முதலீடு செய்து, போதிய லாபம் ஈட்டி, பின்னர் திரும்ப எடுத்துக்கொண்டு போகின்றனரா அல்லது மூலதனம் வளராமலே, வேறு வாய்ப்புகளைத் தேடிப் போகின்றனரா என்பது ஆய்வுக்குரியது.
பாடம் என்ன?
அரசு வெளியிட்ட தகவல்களில் இருந்தே இத்தகைய விபரங்களை நாம் பெறுகிறோம். நிச்சயம் இதன் பாதிப்புகள் அரசுக்கும் தெரிந்திருக்கும். ஒருபக்கம், அரசு தன் முதலீடுகளைப் பெருக்கிக் கொண்டிருக்கும் போது, அதற்குத் துணை செய்யும் விதமாக அன்னிய முதலீடுகளும் தேவை.அதற்கேற்ப தன் கொள்கை முடிவுகளையும் முதலீட்டாளர்கள் கோரும் எளிமைப்படுத்தல்களையும் செய்து தரவேண்டியது, இந்திய அரசின் கடமை. பழைய துறைகளிலேயே மீண்டும் முதலீடுகள் வந்து கொட்டும் என எதிர்பார்ப்பதற்கில்லை.
புதிய துறைகளில், புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும்போது தான், முதலீட்டுக்கான வாசல் திறக்கும். உதாரணமாக, இந்தியாவில் இன்று பெரும் வேகத்தோடு வளருவது, ‘இ – -காமர்ஸ்’ துறையும், சுற்றுலாத் துறையும் தான். இவற்றில் பெரிய நிறுவனங்கள் முதலீடுகளைச் செய்ய காத்திருக்கின்றன. அதை, இந்தியா பயன்புத்திக் கொள்ள வேண்டும்.
இன்னொரு புறம், உள்நாட்டு முதலீட்டாளர்களையும் ஊக்கப்படுத்தி, பல தொழில்களில் ஈடுபடுத்துவது அரசின் கடமை தான். அரசு, தனியார் முதலீடுகள், அன்னிய முதலீடுகள் என்று அத்தனை தரப்பும் முனைந்து செயல்பட்டால் தான் வளர்ச்சி வேகம் பிடிக்கும், வேலைவாய்ப்புகள் பல்கிப் பெருகும். அன்னிய முதலீட்டு சரிவு என்பது நமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. அதை உணர்ந்து சீர்படுத்தத் துவங்குவது அரசின் கடமை.
-ஆர்.வெங்கடேஷ்,பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|