பதிவு செய்த நாள்
24 ஜூலை2018
00:00
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, 10 நிறுவனங்களில், மத்திய அரசின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை, ‘எஸ்.என்.ஐ.எப்.,’ என்ற அமைப்பிற்கு மாற்ற, மத்திய நிதிஅமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யின் புதிய விதிமுறைப்படி, பொதுத் துறை நிறுவனத்தில், பொதுமக்களின் பங்கு மூலதனம், குறைந்தபட்சம், 25 சதவீதம் இருக்க வேண்டும். கடந்த, 2017ஆக.,21ல் அமலுக்கு வர வேண்டிய இந்த விதிமுறை, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, புதிய விதிமுறையை அமல்படுத்துவதற்கான, ‘கெடு’ அடுத்த மாதம் முடிவடைய உள்ளது.
மாற்று திட்டம் :
அதற்குள், பொதுத்துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள், பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு பங்குகளை ஒதுக்க இயலாத சூழல் உள்ளது. அதேசமயம், மீண்டும் கால நீட்டிப்பு கோர முடியாத நெருக்கடி, மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், இப்பிரச்னைக்கு மாற்று திட்டத்தை, மத்திய நிதியமைச்சகம் தயாரித்துள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘செபி’யின் பழைய விதிமுறைப்படி, பொதுத் துறை நிறுவனங்கள், பொதுமக்களுக்கு குறைந்தது, 10 சதவீத பங்குகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்க முடியாத காரணத்தால், மத்திய அரசு, 2013ல், ‘எஸ்.என்.ஐ.எப்.,’என்ற சிறப்பு தேசிய முதலீட்டு நிதியத்தை உருவாக்கியது. அதில், பொதுத் துறையைச் சேர்ந்த, பேக்ட், ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம், எச்.எம்.டி., ஸ்கூட்டர்ஸ் இந்தியா, ஆண்ட்ரூ அண்டு யூல், ஐ.டி.ஐ., ஆகிய, நலிவடைந்த ௬ நிறுவனங்களின், 10 சதவீத பங்குகள் மாற்றப்பட்டன.
ஒப்புதல் :
அதுபோல, தற்போது, பொதுத் துறையைச் சேர்ந்த, எம்.எம்.டி.சி., – ஐ.டி.டி.சி., உட்பட, 10 நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவீத பங்குகளை, ‘எஸ்.என்.ஐ.எப்.,’ அமைப்பிற்கு மாற்ற, நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.இது தொடர்பான நடவடிக்கை, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தபின் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், ‘செபி’ விதிமுறைப்படி, பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 75 சதவீதமாக குறையும்.
கோல் இந்தியா மற்றும் என்.எல்.சி., நிறுவனங்களில், மத்திய அரசின் பங்கு மூலதனம், முறையே, 78.32 சதவீதம் மற்றும், 84.04 சதவீதமாக உள்ளது. இவற்றின் பங்கு விற்பனை தொடர்பான நடவடிக்கைகளை, மத்திய அரசு ஏற்கனவே துவக்கியுள்ளது. எனினும், ‘கெடு’ காலத்திற்குள், பங்கு விற்பனை நடக்காத பட்சத்தில், அந்நிறுவனங்களின், குறிப்பிட்ட சதவீத பங்குகள், ‘எஸ்.என்.ஐ.எப்.,’க்கு மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிறுவனங்கள் பட்டியல் :
எம்.எம்.டி.சி., – ஐ.டி.டி.சி., – எம்.ஆர்.பி.எல்., ஹிந்துஸ்தான் காப்பர், கோல் இந்தியா, என்.எல்.சி., – எஸ்.ஜே.வி.என்., ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன், குத்ரமுக் ஐயர்ன் ஓர் கம்பெனி, மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் ஆகிய, 10 நிறுவனங்களில், பங்கு மூலதனத்தை குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|