பதிவு செய்த நாள்
24 ஜூலை2018
23:18
புதுடில்லி : இந்தாண்டு, அன்னிய நேரடி முதலீட்டை அதிகம் ஈர்த்த நாடுகளில், இந்தியா, 3 இடங்கள் கீழிறங்கி, 11வது இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான, ஏ.டி.,கெர்னி, ஆண்டுதோறும், உலக நாடுகளின் அன்னிய நேரடி முதலீடுகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதில், 2015 முதல், ‘டாப் 10’ பட்டியலில் இருந்த இந்தியா, இந்தாண்டு அதில் இருந்து முதன் முறையாக வெளியேறி, 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த, 2016ல், அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்ததில், இந்தியா, ஒன்பதாவது இடத்தில் இருந்தது; 2017ல், எட்டாவது இடத்திற்கு முன்னேறியது.
இது குறித்து, ஏ.டி.கெர்னி வெளியிட்டுள்ள அறிக்கை: வேகமாக முன்னேறும் வளரும் நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இருந்தபோதிலும், அன்னிய நேரடி முதலீடுகள் குறியீட்டில், இந்தாண்டு, 11வது இடத்திற்கு சென்றுள்ளது. இதற்கு, மத்திய அரசின் ஒருசில கொள்கைகள் காரணமாக இருக்கலாம்.
உதாரணமாக, 2016ல் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை ; 2017ல் ஜி.எஸ்.டி., அமலாக்கத்தின் போது, துவக்கத்தில் ஏற்பட்ட இடையூறுகள் ஆகியவற்றை கூறலாம். இவை, வர்த்தகச் செயல்பாடுகளிலும், பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும் முதலீட்டாளர்கள், குறைந்தபட்சம், குறுகிய காலத்திற்கு, திட்டங்களை தள்ளி வைத்திருக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆறு துறைகளில் பூஜ்யம் :
கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், நிலக்கரி உற்பத்தி, துறைமுகங்கள், சாயப் பொருட்கள், கயிறு தொழில்கள் உட்பட, ஆறு துறைகள், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவில்லை. பாதுகாப்பு துறையில், 10 ஆயிரம் டாலர், அதாவது, 7 லட்சம் ரூபாய் அளவிற்கே, அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளது என, மத்திய வர்த்தக துறை இணை அமைச்சர் சி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|