பதிவு செய்த நாள்
24 ஜூலை2018
23:21
சென்னை : ‘ஸ்டெர்லைட் ஆலை மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், தாமிர மூலப் பொருட்கள் கிடைப்பதில், 40 சதவீதம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது,’ என, தென்னிந்திய தாமிர வாடிக்கையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விலை அதிகரிப்பு :
இது குறித்து, இச்சங்கத்தின் பொருளாளர், ஹேமந்த் மேத்தா, உறுப்பினர் காந்தி உட்பட பலர், சென்னையில் நேற்று கூறியதாவது: தென்னிந்தியாவில், தாமிர மூலப் பொருளால், பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யும், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்தியா முழுவதும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, தாமிர மூலப்பொருட்கள் தேவையில், 40 சதவீதம் தேவையை ஸ்டெர்லைட் பூர்த்தி செய்தன. மீதம் உள்ள, 60 சதவீத தேவையில், 20 சதவீதம் இறக்குமதி செய்தும், இதர மாநிலங்களிலிருந்தும், கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், தாமிரம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஒரு மெட்ரிக் டன் தாமிரத்துக்கு, 15 ஆயிரம் ரூபாய் விலை அதிகம் கொடுக்க வேண்டி உள்ளது. தேவையான தாமிரமும் கிடைப்பதில்லை. இதனால், பொருட்களை குறித்த நேரத்துக்கு உற்பத்தி செய்து, வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியவில்லை. மூன்று மாதங்களில், தாமிரம் தட்டுப்பாடு ஏற்பட்டதால், 2.000 பேர் வேலை இழந்துள்ளனர். எதிர்காலத்தில், தாமிரத்தைக் கொண்டு செயல்படும், உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் மூடக் கூடிய சூழல் உருவாகும்.
நடவடிக்கை :
எனவே, தாமிரம் கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய மாற்று வழி ஏற்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத்தை சந்தித்து, மனு அளித்தோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|