பதிவு செய்த நாள்
30 ஜூலை2018
06:18
முதலீட்டாளர்கள், மியூச்சுவல் பண்ட் திட்டங்கள், தங்கள் ரிஸ்க் தன்மைக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்
மியூச்சுவல் பண்ட் முதலீட்டு சந்தையை கவனித்து வருபவர்கள் குறிப்பிட்ட வகை திட்டங்கள் எதிர்பார்த்த பலனை தராமல் இருப்பதை அறிந்திருக்கலாம். மியூச்சுவல் பண்ட் முதலீடு என்பது, சந்தையின் போக்கிற்கு ஏற்ப அமையக்கூடியது என்றாலும், மிட் மற்றும் ஸ்மால்கேப் திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்கள், அவற்றின் பலன் சரிந்திருப்பதால், கவலை அடைந்துள்ளனர்.
இந்த போக்கு தொடர்வதால், இவர்களில் பல முதலீட்டாளர்கள், முதலீட்டை விற்பது சரியாக இருக்குமா என்று கேட்டுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முதலீட்டின் பலன் குறையும் போது கவலை ஏற்படுவது இயல்பானது தான் என்றாலும், முதலீட்டாளர்கள் தங்கள் ரிஸ்க் தன்மையை கவனித்துக் கொண்டிருந்தால், இந்த பதற்றத்தை தவிர்த்திருக்கலாம் என, நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். ரிஸ்க் தன்மைமியூச்சுவல் பண்ட் திட்டங்களை தேர்வு செய்யும் போது, அவை தங்கள் ரிஸ்க் தன்மைக்கு ஏற்றதா என்பதையும் பார்க்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.
எல்லா முதலீட்டிலும் ரிஸ்க் உண்டு. அதிக பலன் தரக்கூடிய முதலீடுகளில் ரிஸ்க் அதிகமாக இருக்கும். ரிஸ்க் குறைவாக இருந்தால் பலனும் அதற்கேற்ப குறைவாக இருக்கும். மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பலவகையானவை இருக்கின்றன. அவற்றுக்கான ரிஸ்க் தன்மையும் மாறுபடுகின்றன. உதாரணமாக பங்குகளில் பிரதானமாக முதலீடு செய்யும் சமபங்கு மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் நீண்ட கால நோக்கில் அதிக பலன் தர வல்லவை. ஆனால் இவற்றில் ரிஸ்க் அதிகம். சந்தை சரியும் காலத்தில் இவற்றின் பலனும் பாதிக்கப்படும்.
அதே நேரத்தில் டெப்ட் பண்ட் எனப்படும் கடன்சார் நிதிகள், ரிஸ்க் குறைவானவை. இவை மிதமான பலன் தருபவை. பலன், ரிஸ்க் இரண்டையும் கலந்து அளிக்கும் நிதிகளும் இருக்கின்றன. முதலீடு செய்யும் போது, நிதிகள் தரும் பலனை மட்டும் பார்க்காமல், அவை தங்களது ரிஸ்க் தன்மைக்கு ஏற்றதா என பார்க்க வேண்டும். ஒருவர் சமபங்கு நிதி தரக்கூடிய அதிக பலனை மட்டும் மனதில் கொண்டு, அதில் முதலீடு செய்திருந்தால், அந்த நிதி, எதிர்மறை பலனை அளிக்கத்துவங்கும் போது கலக்கம் ஏற்படும்.
முக்கிய கேள்விகள் :
ஆனால், சரிவால் கலக்கம் அடையாமல் முதலீட்டை தொடரும் நிலை இருந்தால், சந்தையின் போக்கு மாறும் போது மீண்டும் பலன் பெறலாம். ஆனால் அதுவரை ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கத்தை தாங்கி கொள்ளும் நிலை உள்ளதா? என, முதலீட்டாளர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். நிதியை தேர்வு செய்யும் போதே, லாபத்தை மட்டும் கணக்கிடாமல் இடையே தொய்வு ஏற்பட்டால், அதனால் ஏற்படக்கூடிய நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா என்றும் பரிசீலிக்க வேண்டும்.
குறுகிய கால நோக்கில் முதலீட்டின் பலனை பெரிதாக நினைக்காமல், அமைதி காப்பது சாத்தியமா எனும் கேள்வியும் முக்கியமானது. இந்த கேள்விகளுக்கான பதிலின் அடிப்படையில் ஒருவர் தன் ரிஸ்க் தன்மையை அறிந்து கொண்டு, அதற்கேற்ப முதலீட்டை நாடலாம். இவ்வாறு செய்தால், இடையே ஏற்படும் மாற்றங்களால் மன நிம்மதியை தொலைக்காமல் இருக்கலாம். அதைவிட முக்கியமாக தவறான முடிவு எடுத்து முதலீட்டின் பலனை இழப்பதை தவிர்க்கலாம்.
சுயமாக நிதி முடிவு எடுக்கும் இளம் தலைமுறை
இக்கால தலைமுறையினரில், 91 சதவீதத்தினர் சொந்தமாக நிதி முடிவுகளை மேற்கொள்கின்றனர் மற்றும் 56 சதவீதத்தினர் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர் என, தெரிய வந்துள்ளது. இணையம் மூலம் நிதிச்சேவை வழங்கும், ‘பாங்க்பஸார்’ தளம் சார்பில், 12 நகரங்களில் வசிக்கும் இளம் தலைமுறையினர் மத்தியில் நடத்தப்பட்டுள்ள ஆய்வு தெரிவிக்கும் முக்கிய அம்சங்கள்:
வைப்பு நிதிகளில், 57 சதவீதத்தினர் முதலீடு செய்கின்றனர். 36 சதவீதத்தினர், பி.எப்., மற்றும் பி.பி.எப்., திட்டங்களை நாடுகின்றனர். தென்னிந்தியாவில் உள்ளவர்கள் மிகுந்த விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கு கொண்டவர்களாக இருக்கின்றனர். மேலும், 80 சதவீதத்தினர் செல்வ வளத்தை முக்கிய இலக்காக கொண்டுள்ளனர். உடல்நலத்தையும் முக்கியமாக கருதுகின்றனர். வெளிநாட்டு சுற்றுப்பயணம், கேட்ஜெட், பேஷன் ஆகியவற்றை வாழ்க்கையின் முக்கிய அம்சங்களாக கருதுகின்றனர். கார் வாங்குவதும் முக்கியமாக அமைகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|