பதிவு செய்த நாள்
30 ஜூலை2018
06:18
இந்திய பங்குச் சந்தைகள் வரலாற்று உச்சத்தில் வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி, அதன் முந்தைய உயர்வான, 11,171 புள்ளிகளைக் கடந்து 11,283 புள்ளிகளை எட்டியது. மேலும், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், அதன் முந்தைய வரலாற்று உயர்வான, 36,443 என்பதைக் கடந்து, 37,368 புள்ளிகளை எட்டியது.
நிப்டி குறியீட்டில் உள்ள, 50 பங்குகளில் பெரும்பாலான பங்குகளின் நிதியாண்டு அறிக்கை, நல்ல முறையில் அமைந்திருந்தன. மேலும், ஐ.டி.சி., மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்ததும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ் ஆகியவற்றின் உயர்வும், சந்தை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.
தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், மற்றும் கமாடிட்டி நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள், சந்தை ஏற்றத்திற்கு உறுதுணையாக இருந்தன. மேலும், பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு, டாலருக்கு எதிராக சரிவை சந்தித்த சூழலில், தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் ஆதாயம் அதிகரிக்கும் என்ற சூழலும், மருத்துவத் துறை சார்ந்த பங்குகளில் பயோகான் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபம் ஈட்டியதும், சந்தை உயர்வுக்கு வழிவகுத்தது.
பட்டியலிடப்பட்டுள்ள மொத்த நிறுவனங்களில், 70 சதவீத நிறுவனங்களின் பங்குகள், கடந்த வார இறுதியில் உயர்ந்து காணப்பட்டன. வரும் புதன் கிழமையன்று, ரிசர்வ் வங்கியின், வட்டி விகிதம் குறித்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில், வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற கருத்து உள்ளது. இருப்பினும், வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், அதனால் சந்தைக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என்ற கருத்தும் நிலவி வருகிறது. இந்த வாரத்தைப் பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நிப்டியை பொறுத்தவரை அதன் அடுத்த ரெசிஸ்டென்ட், 10,350 மற்றும் 10,480 புள்ளிகள் ஆகும். சப்போர்ட், 11,150 ஆகும்.
கவனிக்க வேண்டிய பங்குகள் :
கே.எஸ்.சி.எல்., பயோகான், வி – கார்டு, கோத்ரெஜ் பிராப்பர்டீஸ், பஞ்சாப் நேஷனல் பேங்க்
–முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|