பதிவு செய்த நாள்
30 ஜூலை2018
06:21
ஐடியா நிறுவனமும், வோடபோன் நிறுவனமும் இணைவதற்கு, மத்திய தொலைதொடர்பு துறை அனுமதி அளித்துள்ளது. இந்திய தொலைதொடர்பு தொழிலில் மைல்கல் நிகழ்வு இது.
இதன் விளைவுகள் எப்படி இருக்கும்?
தொலை தொடர்பு துறை வளரும்போது, சேவைகளின் தரம் உயர வேண்டும். மக்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவு செய்யப்பட வேண்டும். இதன் காரணமாக, சிறிய நிறுவனங்கள் படிப்படியாக இணைந்து, வலுவான பெரிய நிறுவனங்கள் உருவாகின்றன. இந்தியாவிலும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. வோடபோன் நிறுவனமும், ஐடியா நிறுவனமும் பல்வேறு தொலைதொடர்பு வட்டங்களில் ஆழ வேரூன்றி உள்ளன. பல ஆண்டுகளாக தத்தமது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, இவை சேவைகளை வழங்கி வந்தன.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ போன்ற மிகப்பெரும் நிறுவனம் தொலைதொடர்பு துறைக்குள் நுழையும்போது, போட்டி கடுமையாகிவிட்டது. சேவைகளுக்கான கட்டணங்கள் ஒருபக்கம் வீழ்ச்சி அடைய, சேவையின் தரம் மறுபுறம் உயர்ந்து கொண்டே போக வேண்டிய தேவை. மக்களும், விலை மலிவான அதேசமயம், தரமான சேவைகளை நோக்கி நகரத் துவங்கிவிட்டனர்.
இதன் விளைவாக, தமக்கான சந்தையை தக்கவைத்துக் கொள்ள, நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம். வோடபோன் நிறுவனமும், ஐடியா நிறுவனமும் இப்படித்தான் கைகோர்க்க முன்வந்தன. பல்வேறு சட்ட ரீதியான, நெறிமுறை ரீதியான அனுமதிகளுக்காக காத்திருந்தன இந்த நிறுவனங்கள். தற்போது அதற்கு அனுமதி கிடைத்துள்ளது, முக்கியமான முன்னேற்றம்.
இதன் அர்த்தம் என்ன?
இனி, பார்தி ஏர்டெல், இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனம் என்ற நிலையில் இருந்து ஒருபடி இறங்கிவிட்டது. வோடபோன் – ஐடியாதான் மிகப்பெரிய நிறுவனம். இந்திய தொலைதொடர்பு சந்தையில், 37 சதவீத பங்கை இவ்விரு நிறுவனங்களும் பெறவிருக்கின்றன. 43 கோடி வாடிக்கையாளர்கள் இவர்களிடம் இருப்பர். பார்தி ஏர்டெல்லும், ஜியோவும் இதற்கடுத்து தான் இருப்பர். இந்த இணைப்பு, பல மட்டங்களில் பல்வேறுவிதமான வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது. தொலைதொடர்பு துறையைப் பொறுத்தவரை, சேவை வழங்கும் நிறுவனங்கள் படிப்படியாக குறைந்து, வலுவான நிறுவனங்கள் உருவாவது பயனுடையது.
அந்த வகையில் வோடபோன் – ஐடியா இணைந்த பின், இந்தியாவில் மொத்தம், 10 நிறுவனங்கள் தான் இருக்கும். அடுத்த சில ஆண்டுகளில், மேலும் சில நிறுவனங்கள் இணையக் கூடும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை விரைந்து தர முடியும். உதாரணமாக, வோடபோன், நகரப் பகுதிகளில் வலுவானது; ஐடியாவோ, ஊரகப் பகுதிகளில் வலுவானது. இரு நிறுவனங்களும் இணையும்போது, சேவைகள் பொதுவானவையாகும். ஊரக பகுதிகளுக்கும் வோடபோனின் தனித்துவமான சேவைகள் போய் சேரும்; அதோடு, சேவைகளின் கட்டணங்கள் குறையும்.
ஏற்கனவே ஜியோவோடு போட்டி போட வேண்டியிருப்பதால், அதற்கு இணையாக சேவைக் கட்டணங்களை தரவேண்டிய நிலைமை. இதில், இரு நிறுவனங்கள் இணையும்போது, பணியாளர்களின் எண்ணிக்கை பரவலாகும்; பின்னர் இயங்கும் தொழில்நுட்பங்கள் பகிர்ந்துகொள்ளப்படும்; திறன்களை மேம்படுத்துவது சுலபமாகும். இதனால், செலவுகள் பெருமளவு குறையும். இதன் பயன் வாடிக்கையாளர்களுகே வந்து சேரும். செலவு மிச்சமாகக்கூடிய இனங்களில் ஒன்று, மொபைல் போன் டவர்கள். இரு நிறுவனங்களும், தனித்தனியே டவர்களுக்குச் செலுத்தி வந்த வாடகை இனி இருக்காது.
மேலும், ஒரே டவரைப் பயன்படுத்தி, ‘3ஜி, 4ஜி’ சேவைகளையும் வழங்கக்கூடிய வாய்ப்புகள் ஆராயப்படும்.இதேபோல், உரிமக் கட்டணம், லைசென்ஸ் கட்டணம், விற்பனை கமிஷன்கள், தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இடையே செலுத்த வேண்டிய இன்டர்கனெக் ஷன் கட்டணங்கள் ஆகியவையும் பெருமளவு குறையும்.செலவுகள் குறையும்போது, சேவையின் தரத்தை உயர்த்த, புதிய முதலீடுகள் செய்ய முடியும். ‘4ஜி பிளஸ், 5ஜி’ ஆகியவை, அடுத்து வரக்கூடிய முக்கியமான முன்னேற்றங்கள். இவற்றை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த வேண்டும் எனில், அதற்குத் தேவையான தொழில்நுட்ப முதலீடுகள் அதிகம்.
வோடபோன் – ஐடியா நிறுவனம் அதைச் செய்ய முனைப்பு காட்ட முடியும். இவையெல்லாம் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் பலன்கள்.லாபம் பெருகும்நிறுவன ரீதியாக பார்த்தால், வோடபோன் – ஐடியா நிறுவனத்தை நம்பி, அதன் சந்தைப் பங்கு, வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பார்த்து, வெளிநாட்டு நிறுவனங்களும், வங்கிகளும் கடன் கொடுக்க முன்வரும். தம்முடைய நஷ்ட அளவைக் குறைத்துக்கொண்டு, படிப்படியாக லாபத்தை நோக்கி நகரவும் முடியும்.
இரு நிறுவனங்களும் இணைவதற்கு, தொலைதொடர்புத் துறை அனுமதி வழங்கியவுடனேயே, பங்குச் சந்தையில், ஐடியா நிறுவனத்தின் பங்குகள் விலையுயர்ந்தது இங்கே கவனிக்கத்தக்கது. இரு நிறுவனங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து வளரக்கூடிய நிறுவனங்கள்; போட்டி நிறுவனங்கள் அல்ல. அதனால், இந்த இணைப்பு என்பது இயற்கையானது; இயல்பானது என்று சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். புதிய நிறுவனத்துக்குச் சவால்கள் இல்லாமல் இல்லை. குறிப்பாக ஜியோவும், பார்தி ஏர்டெல்லும் தங்களுடைய முதலீடுகளை அதிகப்படுத்தி, புதிய சேவைகளை விரைந்து மலிவான விலைக்குக் கொடுக்க முன்வரும். ஏற்கனவே, பார்தி ஏர்டெல் மலிவு விலையில், ‘ப்ரீபெய்டு’ சேவைகளைக் கொடுத்து, போட்டியை சூடாக்கிவிட்டது.
இது தொலைதொடர்பு துறைக்கு ஏற்பட்டுள்ள நற்பேறு. எண்ணற்ற சேவையாளர்கள் குறைந்து, தரமிக்க சேவையாளர்கள் மட்டும் நீடிக்க முடியும். அதன் மூலம், ஒருவித நிதானம் ஏற்படும்.இந்த விலைப் போட்டி, அடுத்த சில ஆண்டுகளுக்குத் தொடரும். அப்போது, வாடிக்கையாளர்கள் அதன் பயனை அனுபவிப்பர்.அதேசமயம், சர்வதேச அளவில் ஏற்படும் முன்னேற்றங்கள் இங்கே விரைந்து அறிமுகமாகவும் செய்யும். மற்ற எந்தத் துறையிலும் இல்லாத அளவுக்கு, தொலைதொடர்பு துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களும், கண்டுபிடிப்புகளும் பெருகி வருகின்றன. அவற்றை இந்தியாவுக்குள் அறிமுகப்படுத்த விரிவான நெட்வொர்க்கும், வலுவான முதலீடுகளும் தேவை.
நிறுவனங்கள் இணைந்து வலு உருவாவது, இத்தகைய முன்னேற்றங்களைக் கொண்டு வருவதற்கான அச்சாரமாக இருக்கும். எல்லாவற்றையும் விட முக்கியம், வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்படும் நம்பிக்கை. திடீரென்று அழைப்புகள் துண்டிக்கப்படுவது, குரல் ஒலிப்பு வீரியம், இணைய இணைப்பு வசதி என்று ஒவ்வொரு துறையிலும் இந்தியர்கள் மேன்மேலும் தரத்தைக் கோர முடியும். அதை ஒரு நிறுவனம் வழங்கவில்லையென்றால், மற்றவரிடம் போய் பெற்றுக்கொள்ள முடியும். வோடபோன் – ஐடியா இணைப்பு, தொலைதொடர்பு துறை அடைந்துள்ள முதிர்ச்சியையே காட்டுகிறது; நிலைத்த, நீடித்த சேவைக்கான உத்தரவாதத்தை உறுதிபடுத்துகிறது. மக்கள் விரும்புவதும் இதைத்தானே.
–ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|