பதிவு செய்த நாள்
30 ஜூலை2018
23:48
புதுடில்லி : ‘பிரதமர் மோடி, இதர துறைகளை போல, தொழில் துறையும் ஊக்குவிக்கப்படும் என, மீண்டும் உறுதி அளித்திருப்பதால், அத்துறையினரின் நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான, ‘அசோசெம்’ தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி, நேற்று முன்தினம், உத்தர பிரதேசத்தில், 60 ஆயிரத்து, 228 கோடி ரூபாய் மதிப்பிலான, 81 முதலீட்டு திட்டங்களை துவக்கி வைத்தார். அப்போது மோடி பேசியதாவது: விவசாயி, தொழிலாளர், அரசு ஊழியர், வங்கியாளர் உள்ளிட்டோரைப் போல, நாட்டின் வளர்ச்சிக்கு, தொழிலதிபர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் தான், நாட்டின் வளர்ச்சி இயந்திரங்கள்.
நாங்கள் உண்மையாகவும், வெளிப்படையாகவும் செயல்படுவதால், தொழில் அதிபர்களுடன் சேர்ந்து நிற்க வெட்கப்படவில்லை. அதேசமயம், தவறு செய்வோர் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். தொழில் துறை வளர்ச்சிக்கான ஊக்குவிப்பு திட்டங்கள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
உத்வேகம்:
இது குறித்து, அசோசெம் தலைவர் சந்தீப் ஜஜோடியா வெளியிட்டு உள்ள அறிக்கை: தொழில் துறை ஊக்கவிக்கப்படும் என, பிரதமர் மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இது, எதிர்காலம் குறித்து, தொழில் நிறுவனங்கள் கொண்டிருந்த கவலைகளை போக்கியுள்ளது. தொழில் துறையினரின் நம்பிக்கையை அதிகரிக்க துணைபுரிந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஸ்திரமான வளர்ச்சி என்ற இலக்கை நோக்கிய, நீண்ட கால செயல்பாட்டிற்கான உத்வேகத்தையும் அளித்து உள்ளது.
அரசு, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், பல்வேறு துறைகளில், மிகப் பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியும். இதனால், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தர பிரதேசத்தில், தொழில்மயமாக்கம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படும். முதலீட்டு திட்டங்களின் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்ய, உ.பி., அரசு, பல்வேறு அமைச்சகங்களின் பங்களிப்புடன், தனி குழுவை ஏற்படுத்தலாம்.
இது போன்ற குழு அமைப்பது, தொழில் துறையினருக்கு, அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த உதவும். இதன் எதிரொலியாக, தனியார் முதலீடுகளும் அதிக அளவில் குவியும். திட்டங்கள் முடிவடைந்த பிறகே, முதலீடுகள் வாயிலான உண்மையான பயன்கள் தெரியவரும்.
வர்த்தக சூழல் :
குஜராத், ஒடிசா, மஹாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களில், தொழில் மற்றும் வர்த்தகச் சூழல் நன்கு உள்ளது. அதற்கு நிகரான சூழலை, உ.பி.,யில் ஏற்படுத்த, முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்க வேண்டும். உ.பி.,யில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேலும், முதலீடுகள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களின் பணிகளையும் கண்காணிக்க வேண்டும்.
அத்துடன், நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து, மிகப் பெரிய அளவில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இந்த நடவடிக்கைகள், உ.பி., மாநிலம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமரின் உரை, எதிர்காலம் குறித்து, தொழில் நிறுவனங்கள் கொண்டிருந்த கவலையை போக்கியுள்ளது. தொழில் துறையினரின் நம்பிக்கையை அதிகரிக்க துணைபுரிந்துள்ளது.
–அசோசெம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|