பதிவு செய்த நாள்
31 ஜூலை2018
23:35
புதுடில்லி : ‘இந்திய வங்கிகளின் சோதனைக் காலம் பெரும்பாலும் முடிந்து விட்டது. அதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவற்றின் தர நிர்ணயம் உயரும்’ என, எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்நிறுவனம் ‘இந்திய வங்கிகளின் மோசமான காலம் பெரும்பாலும் முடிவடைந்தது’ என்ற தலைப்பில், ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வாராக்கடன் :
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளும், மத்திய அரசின் சீர்திருத்தங்களும், இந்திய வங்கித் துறைக்கு உத்வேகம் அளித்துள்ளன. வங்கிகளின் மொத்த கடனில், வாராக் கடனாக மாற வாய்ப்புள்ள கணக்குகள், 13 – -15 சதவீதம் உள்ளன. இவற்றை, வங்கிகள் அடையாளம் கண்டு, கடன் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. இதனால், இடர்பாட்டுக்கு உரிய கடன்கள் இல்லாத நிலை உருவாகும்.
மறைக்க முடியாது :
வங்கிகள், வாராக்கடனுக்காக அதிக நிதி ஒதுக்குவதால், அவற்றின் சொத்து மதிப்பு சரிகிறது. மூலதன இருப்பு விகிதம் குறைகிறது. இதை தடுக்க, மத்திய அரசின், மறு பங்கு மூலதன திட்டம் உதவும். இத்தகைய செயல்பாடுகள், வங்கித் துறையின் பலவீனத்தை போக்கி, அடுத்த இரண்டு ஆண்டுகளில், வலிமையானதாக மாற்றும். அதேசமயம், எதிர்பாராத விதமாக, இடர்பாட்டுக்கு உரிய கடன்கள் அதிகரித்தால், வளர்ச்சி சற்று தாமதமாகும்.
வாராக் கடனாக மாற வாய்ப்புள்ள கடன்களை கண்டறியும் நடவடிக்கையும், பல நிறுவனங்கள் மீண்டும் லாப பாதைக்கு திரும்பி வரும் சூழலும், வங்கித் துறை வளர்ச்சிக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன. மேலும், திவால் சட்டத்தின் கீழ், வாராக் கடனை விரைந்து மீட்கும் நடவடிக்கைகளும், வங்கிகள், மோசமான கடன்களில் இருந்து மீள வழிவகை செய்யும். ரிசர்வ் வங்கியின் கடுமையான விதிமுறைகள் காரணமாக, வங்கிகள், வாராக் கடன் கணக்கை குறைத்து காட்டி, சொத்து மதிப்பின் உண்மையான பலவீனத்தை மறைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
நிதி ஒதுக்கீடு :
இந்நிலையில், வங்கிகளின் சொத்து மதிப்பு குறித்து, ரிசர்வ் வங்கி மீண்டும் மதிப்பீடு செய்து வருகிறது. குறிப்பாக, 240 நிறுவனங்களின் கடன்களை ஆராய்ந்து வருகிறது. இவற்றில், பெரும்பான்மை கடன்கள், இடர்பாட்டிற்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது. அக்கடன்களுக்கு, உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால், இந்திய வங்கிகளின் சோதனைக் காலம் பெரும்பாலும் முடிந்து விட்டதாகவே கூற வேண்டும். அதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில், வங்கிகளின் தர நிர்ணயம், அதிகரிக்கவே செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நான்கு அம்ச திட்டம் :
மத்திய அரசு, வங்கித் துறையை மேம்படுத்த, நான்கு அம்ச திட்டத்தை வகுத்துள்ளது.
* இடர்பாட்டிற்கு வாய்ப்புள்ள கடன்களை கண்டறிதல்
* வங்கிகளுக்கு மறுபங்கு மூலதனம் வழங்குதல்
* வங்கி வளர்ச்சி திட்டங்களை உருவாக்குதல்
* வங்கித் துறையில் சீர்திருத்தங்கள் செய்வது
மேற்கண்டவற்றில், முதல் மூன்று அம்சங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கி சீர்திருத்த திட்டங்கள் போதிய அளவிற்கு மேற்கொள்ளப்படவில்லை
– எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|