பதிவு செய்த நாள்
05 ஆக2018
00:37
புதுடில்லி:அமெரிக்காவின், 29 பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி, அமலுக்கு வருவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், உருக்கு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு, முறையே, 25 மற்றும் 10 சதவீதம் வரி விதித்துள்ளார்.இதனால், அவற்றின் ஏற்றுமதியில், இந்தியாவுக்கு, கூடுதலாக, 1,600 கோடி ரூபாய் வரிச் சுமை ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
புகார்
இது குறித்து, உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா புகார் செய்து உள்ளது.மேலும், அமெரிக்கா விற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்கிருந்து இறக்குமதியாகும் ஆப்பிள், பாதாம், பருப்பு உள்ளிட்ட, 29 பொருட்களுக்கு வரியைஉயர்த்தியது.இதன்படி, அமெரிக்க வால்நட் இறக்குமதிக்கு, 30 சதவீத வரி, 120 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டாணி, கொண்டைக்கடலை, மசூர் பருப்புக்கு, சுங்க வரி, 30 சதவீதத்தில் இருந்து, 70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தள்ளி வைப்பு
பயறு வகைகளுக்கு, 30 சதவீத வரி, 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று அமலுக்கு வருவதாக இருந்த புதிய வரி, செப்., 18க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அமெரிக்கா – இந்தியா இடையே, இரு தரப்பிலும் உயர்த்தப்பட்ட இறக்குமதி வரியை குறைப்பது குறித்து, பேச்சு நடைபெற்று வருகிறது. இதில், பரஸ்பர சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதனால், அமெரிக்காவின், 29 பொருட்களுக்கான புதிய வரி அமலுக்கு வருவது, 45 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. பரஸ்பர பேச்சில், சுமுக உடன்பாடு ஏற்படும்பட்சத்தில், வரி விதிப்பு மாறக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.
பாதிப்பு
இந்தியா, அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, உருக்குமற்றும் அலுமினியம் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.அவற்றுக்கான வரியை, அமெரிக்கா உயர்த்தியுள்ளதால், இந்தியா, கூடுதலாக, 1,614 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேரும்.இதில், உருக்கு மற்றும் அலுமினிய பொருட்களின் பங்கு முறையே, 1,330 கோடி மற்றும் 284 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த இழப்பை ஈடு செய்ய, வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|