பதிவு செய்த நாள்
05 ஆக2018
00:42
புதுடில்லி:பங்குச் சந்தையில், ‘சப் – புரோக்கர்’ எனப்படும் துணை தரகர் பிரிவு நீக்கப்படுவதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’ தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக, செபி வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, ஜூன் 18ல், நடைபெற்ற, செபி இயக்குனர் குழு கூட்டத்தில், துணை தரகர் பிரிவை நீக்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனால், இனி துணை தரகராக பதிவு செய்யக் கோரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
ஏற்கனவே, துணை தரகராக பதிவு செய்யக் கோரி வந்த விண்ணப்பங்கள், பங்குச் சந்தைகள் வாயிலாக, விண்ணப்பதாரர் களிடம் திரும்ப அளிக்கப் படும்.
ஒப்படைக்கலாம்
தற்போது உள்ள துணை தரகர்கள், 2019, மார்ச், 31க்குள், வர்த்தக உறுப்பினர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபர் ஆக, பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு மாற விரும்பாத துணை தரகர்கள், அடுத்த ஆண்டு, மார்ச் இறுதிக்குள், தங்கள் உரிமத்தை திரும்ப ஒப்படைத்து விட வேண்டும்.வர்த்தக உறுப்பினர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபராக மாறியோரின், துணை தரகர் உரிமம் ரத்து செய்யப்படும்.அவ்வாறு மாறாமல் உள்ளோரின், துணை தரகர் உரிமம் திரும்பப் பெறப்படும்.
தற்போது உள்ள துணை தரகர்கள் அனைவரும், நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டிற்கு, உரிமத்தை புதுப்பிப்பதற்கான தொகையை செலுத்த வேண்டும்.துணை தரகர்கள், அடுத்த நிதியாண்டிற்கும் சேர்த்து, உரிமத்தை புதுப்பிக்க ஏற்கனவே பணம் செலுத்தியிருந்தால், சம்பந்தப்பட்ட பங்குச் சந்தைகள் அளிக்கும் ரசீதின்படி, அத்தொகை, திரும்ப வழங்கப்படும்.துணை தரகர்கள், உரிமத்தை ஒப்படைக்கவோ அல்லது வர்த்தக உறுப்பினராக மாறவோ உரிய நிர்வாக வசதிகளை, பங்குச் சந்தைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
முன்பேர சந்தை
முன்பேர சந்தை பிரிவில், அங்கீகரிக்கப்பட்ட நபராக செயல்பட, துணை தரகர்கள் ஏற்கனவே உரிமம் பெற்றிருந்தால், அவர்கள், ரொக்கப் பிரிவில், அங்கீகரிக்கப்பட்ட நபராக பதிவு செய்து வர்த்தகத்தை தொடரலாம்.அதுபோல, முன்பேர சந்தையில் ஈடுபட அங்கீகாரம் பெறாத துணை தரகர்கள், அங்கீகரிக்கப்பட்ட நபர் என்ற பிரிவிற்கு மாறலாம். இதற்கு, ரொக்கப் பிரிவில் பின்பற்றும் நடைமுறைகளின்படி, பங்குச் சந்தைகள் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தகுதியுள்ள துணை தரகர்கள், விரும்பினால், பங்குத்தரகர்களாகவும் மாறலாம்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
பங்குச் சந்தைகளில் பதிவு பெற்ற, பங்குத் தரகு நிறுவனங்களின் கீழ், முகவர்கள் போல, துணை தரகு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை, பங்கு வர்த்தக ஆலோசனைகளையும், சேவைகளையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இதே சேவைகளை, பங்குச் சந்தைகளின் உரிமம் பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட நபர்களும் வழங்குகின்றனர்.
பங்குத் தரகர்கள், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடமும், அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், பங்குச் சந்தைகளிலும் பதிவு செய்கின்றனர்.இரு பிரிவுகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதால், துணை தரகர்கள் பிரிவு நீக்கப்படுவதாக, பங்கு சந்தையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|