பதிவு செய்த நாள்
06 ஆக2018
00:15
பங்கு முதலீட்டு ஆய்வு பற்றிய புரிதலும், அதன்படி நடப்பதும், முதலீட்டு வெற்றிக்கு மிக அவசியமான ஒன்றாகும். பங்குகள் குறித்து ஆய்வு செய்யவும், அது குறித்து கற்று அறியவும், உரிய பயிற்சியும், பக்குவமும் தேவை.
ஆனால், இவற்றை கற்பிக்கும் இடங்கள் மிகவும் குறைவு. கற்பிக்கும் ஆளுமைகளும் அதிகமில்லை. இருக்கும் ஆளுமைகளை அடையாளம் காண்பதே ஒரு கடினமான தேடல். அந்த தேடலில் ஈடுபடவே பெரும் முயற்சி செய்ய வேண்டும்.யாரிடம் கற்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு யாரிடம் கற்கக் கூடாது என்பதும் முக்கியம். பங்கு முதலீடு என்பதே, உரிய புரிதலோடும், ஆளுமையின் வழிகாட்டுதலோடும் அமைத்துக் கொள்ளும் தன்னார்வ கல்வி முறை தான்.
இந்த சூழலில், யாரிடம் போய் கற்பது என்பதறியாத நிலையில், தாமாகவே கற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பலரும் தள்ளப்படுகின்றனர்.ஆர்வத்தின் உந்துதல், அவர்களை தானாகவே முன்னெடுத்து செல்கிறது. படிப்படியாக தங்கள் புரிதலை வளர்க்க முனைவதும், தவறுகளிலிருந்து பாடம் கற்பதும், அவர்களை கற்பிக்கப்பட்ட முதலீட்டாளர்களாக உருவாக்குகின்றன.
ஆனால், முதலீடு செய்வோரில் பெரும்பான்மையானோர், ஆய்வு செய்வது எப்படி என்றே தெரிந்து கொள்ளாமல், தங்கள் ஒட்டுமொத்த சேமிப்பையும் பங்குகளில் முதலீடு செய்கின்றனர்.சொல்லப் போனால், நம்முடைய சந்தையில், இவ்வாறு இயங்குவோர் தான் அதிகம். ‘என்னால் முடியும்’ என்ற தன்னம்பிக்கை மிகையின் துாண்டுதல், அவர்களை முன் நடத்துகிறது.
வேறு துறைகளில் அவர்களுக்கு உள்ள ஆளுமையும், வெற்றிகளும், முதலீட்டிலும் வெளிப்படும் என்று எண்ணி விடுகின்றனர்.ஆனால், பங்கு ஆய்வு என்பது ஒரு கலை. பல துறை ஆளுமையோடு, நடத்தை சார்ந்த பக்குவமும் கூடும் இடம் அது.நம்பிக்கையின் அளவீடு மிகையாகாமல் பார்த்துக் கொள்வது, இந்த கலை வளர்ப்பின் முக்கிய தேவை.
வெற்றி என்பது, நிதானம் சார்ந்தது என்பதை பலரும் அறியாமலே, முதலீடு செய்ய துணிகின்றனர்.இதை உணர்ந்து, தன்னுடைய முதலீட்டு அணுகுமுறையை மாற்றி அமைத்துக் கொள்வது, ஒவ்வொரு முதலீட்டாளரின் கடமை ஆகும்.வெற்றிப் பாதையை தெரிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தோல்வி பாதையையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
பங்கு முதலீட்டை ஆய்வு செய்வது எப்படி என்பதை அறியாமலே, முதலீட்டு முடிவுகளை எடுக்கும் நிலையை அடைந்துவிட்டதாக நினைப்பதே, பலருடைய தோல்விக்கு அடிப்படை காரணம்.ஆய்வை எளிதில் கடந்து செல்வதன் மூலம், முதலீடுகள் எளிமை அடையாது. மாறாக, ஆய்வு குறைபாடுகளோடு செய்யப்படும் முதலீடு, அந்த தாக்கத்தோடு வளர்ந்து, காலம் கடந்து போன பின், நமக்கு துயர் விளைவிக்கும்.
பிரயாணங்கள் செய்யும் போது, எப்படி திட்டமிட்டு பயணிக்கிறோமோ, அதே அளவு திட்டமிடுதல் முதலீட்டிலும் அவசியம். தோல்விக்கு என்று சில தெளிவான காரணங்கள் அமைகின்றன. அந்த காரணங்களை களைந்து விட்டு செய்யப்படும், முறையான முதலீட்டு ஆய்வு, ஒவ்வொரு முதலீட்டாளரையும் வெற்றியை நோக்கி பயணிக்க உதவும்.அத்தகைய பயணம் மேற்கொள்ள, நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் பங்குச்சந்தை
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|