பதிவு செய்த நாள்
09 ஆக2018
00:18
புதுடில்லி:வங்கியில் கடன் மோசடி செய்வோர், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுக்க, பாஸ்போர்ட் சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நிரவ் மோடி, மெஹுல்சோக்சி, விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்கள், வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, திரும்பத் தராமல், வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டனர். அவர்களை, இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதுபோன்ற மோசடி தொழிலதிபர்கள், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுக்க, தற்போது, பாஸ்போர்ட் சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:வங்கி கடன் பெற்று, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வோரை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து, மத்திய நிதிச் சேவைகள் துறை செயலர், ராஜீவ் குமார் தலைமையிலான குழு, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.
அதில், வசதி இருந்தும், வங்கி கடனை திரும்பச் செலுத்தாமல் தப்பி ஓடுவோரை தடுக்க, பாஸ்போர்ட் சட்டத்தில் திருத்தம் செய்யலாம் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.ஒருவரின் பாஸ்போர்ட்டை முடக்கவும், திரும்பப் பெறவும், பாஸ்போர்ட் சட்டம், பிரிவு – 10, வகை செய்கிறது.
இந்த பிரிவில், 50 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வங்கி கடனை திரும்பச் செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்புவோரை தடுத்து, தண்டிக்கும் அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன.இந்த சட்ட திருத்தத்தால், நேர்மையான தொழிலதிபர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படக் கூடாது எனவும், மத்திய அரசு விரும்புகிறது. அதற்கேற்ற வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என, தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|