பதிவு செய்த நாள்
09 ஆக2018
00:20
வாஷிங்டன்:இந்தியா, ஜி.எஸ்.டி., வரிகளை, இரண்டாக குறைக்கலாம் என, பன்னாட்டு நிதியம் யோசனை தெரிவித்து உள்ளது.
கடந்த, 2017, ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தது.இந்நிலையில், பன்னாட்டு நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய, மாநில அரசுகள் வசூலித்த பல்வேறு வரிகள், ஜி.எஸ்.டி., என்ற ஒரே வரியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வரி சீர்திருத்த நடவடிக்கையில், ஜி.எஸ்.டி., ஒரு மைல்கல் என்றால், அது மிகையாகாது.
நிர்வாக செலவு
எனினும், அதிக வரியினங்களுடன் சிக்கலான நடைமுறையைக் கொண்டதாக, ஜி.எஸ்.டி., உள்ளது. இதை, தற்போதைய வரி வருவாயில் எவ்விதபாதிப்பையும் உண்டாக்காத, இணக்கமான நடைமுறைக்கு மாற்ற வேண்டும். இதனால், வரி வருவாய் அதிகரிக்கும் என்பதுடன், நிர்வாகச் செலவினங்களும் குறையும்.இதற்கு, தற்போது உள்ள, ஐந்து முக்கிய வரிகளை, இரண்டாக குறைக்க வேண்டும். பொதுவான பயன்பாட்டு பொருட்களுக்கு, குறைந்த வரி விகிதமும், அதை விட, சற்று அதிக வரி, ஆடம்பரபொருட்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும்.
சுலபமான நடைமுறை
இத்துடன், சில பொருட்களுக்கு தற்போது உள்ள, பூஜ்ய வரி விதிப்பும் தொடரும்போது, ஜி.எஸ்.டி., நடைமுறை சுலபமாகும்; நிர்வாகச் செலவினங்கள் குறையும்.தற்போது, பாமர மக்களின் நுகர்வு பொருட்களுக்கு உள்ள வரியை விட, பணக்காரர்கள் பயன்படுத்தும் ஆடம்பர பொருட்களுக்கான வரி அதிகமாக உள்ளது. மக்களின் நுகர்வு அதிகரித்து வரும் நிலையில், இது பயனுள்ள வரி விதிப்பு எனலாம்.
எனினும், வரியினங்கள் வாயிலாக, ஒரே சீரான வருவாய் ஈட்டுவது தான், ஜி.எஸ்.டி.,யை சுலபமான நடைமுறைக்கு மாற்றும்.பல வகை வரிகளும், பிற அம்சங்களும், ஜி.எஸ்.டி.,யை பின்பற்றுவதில் சிரமத்தையும், அதிக நிர்வாக செலவையும் ஏற்படுத்துகின்றன.இரு வகை வரிக்கு மாறினால், மேலும் சிறப்பான பயன் பெறலாம். ஜி.எஸ்.டி.,யால், அமைப்பு சார்ந்த துறையில், பொருளாதாரம் வலுப்பெற்று, வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக, உற்பத்தி பெருகும். நுகர்வு அதிகரித்து, வரி வருவாய் பெருகும்போது, சமூக நலன் மற்றும் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
49 நாடுகளில் ஒரே வரி
இந்தியாவை பொறுத்தவரை, ஜி.எஸ்.டி.,யில், 3, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, ஐந்து முக்கிய வரி விகிதங்கள் உள்ளன. அத்துடன், கச்சா வைரங்களுக்கு, 0.25 சதவீதம் வரி உள்ளது. பால், முட்டை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு, பூஜ்ய வரி விதிப்பு உள்ளது.ஜி.எஸ்.டி., அறிமுகத்தால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, ஆடம்பர பொருட்களுக்கு, கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
இவற்றுடன் ஒப்பிடும்போது, மதிப்பு கூட்டப்பட்ட வரி உள்ள, 115 நாடுகளில், 49 நாடுகளில் ஒரே வரி விதிப்பு உள்ளது. 28 நாடுகளில், இரு வகை வரிகள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|