பதிவு செய்த நாள்
12 ஆக2018
00:08
புதுடில்லி:மின்னணு வர்த்தக வரைவு கொள்கை குறித்து, சிலர் தெரிவித்த மாறுபட்ட கருத்துகள் காரணமாக, மீண்டும் பரிசீலனை செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், கடந்த மாதம், மின்னணு வர்த்தகத்திற்கான வரைவு கொள்கையை, அனைத்து தரப்பினரின் கருத்து கேட்புக்காக வெளியிட்டது.
தலையிட கூடாது
அதில், ‘வலைதளம் வாயிலாக பொருட்களை விற்பனை செய்யும் மின்னணு வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர் தகவல்களை, இந்தியாவிலேயே சேமிக்க வேண்டும்’என, தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும், வலைதள சந்தை நிறுவனங்கள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, பொருட்களின் விற்பனை விலையில் தலையிடக் கூடாது என்றும், வரைவறிக்கை வலியுறுத்தியது.
அத்துடன், மின்னணு வர்த்தக நிறுவனங்கள் 'மெகா' தள்ளுபடிகள் வழங்குவதை அனுமதிக்க கூடாது ; சலுகைகளை முன்கூட்டியே அறிவிக்க, கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களும், அதில் இடம் பெற்றிருந்தன.மின்னணு வணிகத்தில், உள்நாட்டு நுகர்பொருட்கள் விற்பனை ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இதற்காக, சரக்கு கையிருப்பு அடிப்படையில், வலைதளம் மூலம் உள்நாட்டு பொருட்கள் விற்பனையில், 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மேலும், மின்னணு வணிகத்தில், பணப் பரிவர்த்தனைகளுக்கு, மத்திய அரசின் 'ரூ பே' கார்டு பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வழிமுறைகளும், அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.
மின்னணு வணிகத்தை ஒழுங்குபடுத்தவும், அதேசமயம், பாரம்பரிய கடைகளின் வர்த்தக பாதுகாப்பை வலியுறுத்திய வரைவு கொள்கை, குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சிக்கு உதவும் என, அத்துறை சார்ந்தவர்கள் கருத்து கூறினர் .எனினும், ‘வாடிக்கையாளர் தகவலை இந்தியாவில் சேமித்து வைக்க, மிகப் பெரிய அளவில் முதலீடு தேவைப்படும்; அது, மின்னணு வணிக துறை வளர்ச்சிக்கு வேகத் தடையாக இருக்கும்’எனவும் கருத்துதெரிவிக்கப்பட்டது.
உத்தரவு
இந்நிலையில், அனைத்து தரப்பினரின் ஆதரவை பெறும் வகையில், மின்னணு வணிக வரைவு கொள்கையை, மேலும் செம்மைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதையடுத்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு, வரைவு அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு, அதிகாரிகளுக்குஉத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அமைச்சகம் 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள தகவல்:மின்னணு வரைவு கொள்கையில், சிலர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அனைத்து தரப்பினரிடம் கலந்து பேசி, வரைவு கொள்கையை மறுபரிசீலனை செய்யுமாறு, அதிகாரிகளுக்கு, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
புதிதாக தயாரிக்கப்படும் வரைவு கொள்கை, அமைச்சரின் அனுமதிக்கு பின், கருத்து கேட்புக்காக விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமேசான் – பிளிப்கார்ட்
தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்களை, நுகர்வோருக்கு விற்கும் பாலமாக, பிளிப்கார்ட், அமேசான் இந்தியா, ஸ்நாப்டீல் போன்ற வலைதள சந்தை நிறுவனங்கள் செயல்படுகின்றன.இச்சேவைக்கு, தயாரிப்பு நிறுவனங்கள் கட்டணம் செலுத்துகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|