பதிவு செய்த நாள்
15 ஆக2018
00:39
மதுரை:‘‘ஜி.எஸ்.டி., அமலாக்கத்தால் இந்தியாவின் தென் பகுதிகளில் கூட எளிதாக வணிகம் செய்ய முடிகிறது,’’ என, நேபாள தொழில் வர்த்தக சங்க தலைவர், ராஜேஷ் காஷி ஷ்ரேஸ்தா கூறினார்.
மதுரை வேலம்மாள் மருத்துவமனை, ஐடா ஸ்கட்டர் வர்த்தக மையத்தில், தொழில் வர்த்தக சங்க அறக்கட்டளை சார்பில் நடக்கும், ‘வைப்ரன்ட் தமிழ்நாடு’ என்ற வேளாண், உணவு வர்த்தக பொருட்காட்சியில் அவர் பேசியதாவது:இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டுமே இதுவரை வர்த்தகம் செய்து வந்தோம்.
போக்குவரத்து, ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றில் ஏற்பட்ட இடையூறுகளால் தென் மாநிலங்களில் வர்த்தகம் செய்ய இயலவில்லை. ஆனால், ஜி.எஸ்.டி., வந்த பின் எங்களுக்கு தென்னகத்தில் வர்த்தகம் செய்வது எளிதாகியுள்ளது.தென்மாநில வர்த்தக துவக்கமாக, இந்த கண்காட்சியை பார்க்கிறேன். இங்குள்ள பல உணவு வகைகள் நேபாளத்திலும் உள்ளன. இந்த கண்காட்சி மூலம் எங்களுக்கு நிறைய வர்த்தக தொடர்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சவுதி அரேபியா, இலங்கை, மலேஷியா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும், வர்த்தக வாய்ப்புகள் குறித்து பேசினர்.
சிலர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்:
கத்கா, நேபாளம்:இதில் பங்கேற்றது மிகச்சிறந்த அனுபவம். ஆர்கானிக் உணவு வகைகள் குறித்த செயல் முறை விளக்கங்கள் பயனுள்ளதாக இருந்தன. வர்த்தக சங்கத்தினர் அருமையான ஏற்பாட்டை செய்துள்ளனர்.
ஷங்கா, இலங்கை:இங்கு அனைத்து உணவு வகைகளும் இடம் பெற்றுள்ளன. இது தென்னிந்திய மற்றும் வெளிநாட்டு உணவு வர்த்தகத்திற்கு நல்ல தொடக்கம்.
சுபாசன்யா கேவ்பான், தாய்லாந்து:சிறுதானிய பிஸ்கட் தயாரிப்பு போன்ற நல்ல ஆலோசனைகள் கிடைத்தன. சீனா போன்ற நாடுகளில், பெரும் முதலீடுக்கு மட்டும் தொழில் வசதி உள்ளது. ஆனால், சிறுவணிகர்களும் தொழில் தொடங்க ஏதுவாக உள்ளதால் இங்கே வந்துள்ளேன்.
பய்குதா கொய்ராலா, நேபாளம்:முதன்முறையாக இந்த வர்த்தக பொருட்காட்சியில் கலந்து கொள்கிறேன்.தமிழ்நாட்டின் உணவு வர்த்தக சங்க நிர்வாகிகளை சந்தித்ததன் மூலம், அவர்களுடன் இணைந்து புதிய உணவு வகைகளை விரைவில் அறிமுகப்படுத்துவோம். இது வர்த்தக வளர்ச்சிக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|