பதிவு செய்த நாள்
23 ஆக2018
02:36
புதுடில்லி : தேன் மற்றும் தேன் பொருட்களில் கலப்படத்தை தடுக்க, அவற்றுக்கு தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, பவன் அகர்வால் கூறியதாவது: தேன் மற்றும் அதன் உப பொருட்களுக்கான தரக் கட்டுப்பாடுகள், அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம், கலப்பட தேன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
சுக்ரோஸ் :
உள்நாட்டில் தேன் மற்றும் தேன் பொருட்கள் தயாரிப்போருக்கும், அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வோருக்கும், புதிய விதிமுறைகள் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைப்படி, தேன் மற்றும் தேன் பொருட்களில், நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு சுக்ரோஸ், குளுகோஸ், மகரந்த அடர்த்தி உள்ளிட்ட, 18 அம்சங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். சுக்ரோஸ் அளவு அதிகபட்சம், 5 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். ஒரு கிராம் தேனில், அதிகபட்ச ஈரப்பதம், 20 சதவீதம்; மகரந்த அடர்த்தி, 25 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தேனின் உப பொருட்களான, ‘தேனீ மெழுகு, ராயல் ஜெல்லி’ ஆகியவற்றுக்கும் தர நிர்ணயவிதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தேன் என்ற பிராண்டில் விற்பனை செய்யப்பட்டால், அதில் உணவுப்பொருள் சேர்க்கைகள் எதுவும் இடம் பெறக்கூடாது. தேனின் அத்தியாவசிய மூலக்கூறுகளில் மாற்றம் அல்லது தரம் குறையும் வகையில் சூடுபடுத்தவோ அல்லது பதப்படுத்தும் முறைகளையோ கையாளக் கூடாது.
குறிப்பிட்ட மலர்கள் அல்லது தாவரங்களில் இருந்து திரட்டப்பட்ட தேன் எனில், உற்பத்தி செய்யும் இடம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், ‘லேபிள்’ மீது அச்சிட வேண்டும்.
90 ஆயிரம் டன் :
மத்திய அரசு, எம்.ஐ.டி.எச்., திட்டம் மற்றும் தேசிய தேனீ வாரியம் மூலம், அறிவியல் ரீதியில், தேனீ வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில், 30 லட்சம் தேனீ வளர்ப்பு குழுக்கள் மூலம், ஆண்டுக்கு, 90 ஆயிரம் டன் தேன் தயாராகிறது. இத்துறையில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|