பதிவு செய்த நாள்
23 ஆக2018
02:38
புதுடில்லி : குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., செலுத்திய வகையில், 10 ஆயிரம் கோடி ரூபாய், ‘ரீபண்டு கிடைக்காமல் கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன.
இந்நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்து, மூலப்பொருட்களுக்கு செலுத்திய வரியை, ‘இன்புட் கிரெடிட்’ எனப்படும், உள்ளீட்டு வரிப் பயனாக திரும்பப் பெறுகின்றன.
தவறுகள் :
இந்நிலையில், ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு மாறுவதில் நேர்ந்த சிரமம், கணக்கு தாக்கல் செய்வதில் நிகழும் தவறுகள் போன்றவற்றால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலில் கொள்முதல், விற்பனை போன்றவற்றின் விபரங்களில் ஏற்படும் தவறுகள் காரணமாக, ஏராளமான நிறுவனங்கள், ரீபண்டு பெற முடியாமல் தத்தளிக்கின்றன.
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலில், பொருட்களின் கொள்முதலுக்கு செலுத்திய வரி மற்றும் அப்பொருட்கள் மூலம் தயாராகும் பொருட்களின் விற்பனை வரி குறித்த விபரங்கள் சரியாக பொருந்தினால், உள்ளீட்டு வரிப் பயனை சுலபமாக பெறலாம்.
தாமதம் :
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் நடைமுறைகள் அனைத்தும், கணினி வாயிலாக நடைபெறுவதால், சரியாக பொருந்தாத, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் கணக்கு விபரங்களுக்கு ரீபண்டு கிடைப்பது தாமதமாகிறது. இந்த வகையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, உள்ளீட்டு வரிப் பயனை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின், டைரக்டர் ஜெனரல், அஜய் சஹாய் கூறியதாவது: ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், உள்ளீட்டு வரியை திரும்பப் பெற முடியாமல், கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, வளர்ச்சி கண்டுள்ள போதிலும், பலர், நடைமுறை மூலதனச் செலவுகளை சமாளிக்க, போதிய நிதியாதாரம் இல்லாமல் திணறுகின்றனர்.
பெரும்பான்மையான நிறுவனங்கள், உள் ஆதாரங்கள் மற்றும் உறவினர்கள் மூலமாகவே, அவற்றின் நிதி தேவைகளை சமாளிக்கின்றன. வங்கிக் கடன் பெறுவதும், இந்நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது. இந்தாண்டு ஏப்ரலில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் வங்கிக் கடன், 48 சதவீதம் சரிவடைந்துள்ளது. மத்திய அரசு, உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு கண்டால், குறு, சிறு நிறுவனங்கள் சுறுசுறுப்பாக செயல்படும் என்பதுடன், ஏற்றுமதியும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்றுமதி பாதிக்கும்:
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, குறித்த காலத்தில் உள்ளீட்டு வரியை திரும்ப அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி செலுத்தி விட்டு, நடைமுறை செலவுகளை சமாளிக்க, உள்ளீட்டு வரிப் பயனைத் தான் நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ளன. திரும்ப வர வேண்டிய தொகை, அதிக அளவில் நிலுவையில் இருந்தால், ஏற்றுமதியாளர்கள் பணத் தட்டுப்பாடு காரணமாக, மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதை நிறுத்த நேரிடும். இதனால் உற்பத்தி பாதித்து, ஏற்றுமதி சரிவடையும்.
-எம்.எஸ்.மணிபங்குதாரர், ‘டெலாய்ட் இந்தியா’
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|