பதிவு செய்த நாள்
27 ஆக2018
23:29
மும்பை : நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை எட்டின. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின், ‘சென்செக்ஸ், நிப்டி’ குறியீடுகள், வரலாற்றில் இல்லாத அளவிற்கு, உயர்வைக் கண்டன.
கடந்த வாரம், இறுதி வர்த்தக நாளன்று, அமெரிக்க மத்திய வங்கி தலைவர், ஜெரோம் போவல், ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ‘‘அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உயர்வு ஆகியவற்றின் அடிப்படையில், வங்கி வட்டி விகிதம் படிப்படியாக உயர்த்தப்படும்,’’ என, அவர் கூறினார். இதன் காரணமாக, அன்று, அமெரிக்க பங்குச் சந்தைகள் சிறப்பான ஏற்றத்துடன் முடிவடைந்தன.
ஆசியா :
அதன் தாக்கம், இவ்வார வர்த்தகத்தின் முதல் நாளான நேற்று, ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட சர்வதேச பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. இந்நிலையில், சீன மத்திய வங்கி, ‘அன்னியச்செலாவணி சந்தையை ஸ்திரப்படுத்த, புதிய முறையில், தினமும் யுவான் கரன்சி மதிப்பீடு செய்யப்படும்’ என, அறிவித்தது. இத்துடன், உள்நாட்டு நிதி நிறுவனங்களும், அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்களும், போட்டி போட்டு பங்குகளை வாங்கியதால், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.
ரியல் எஸ்டேட் தவிர்த்து, வங்கி, மின்சாரம், உலோகம் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள், விலை உயர்வுடன் கைமாறின. இதனால், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, 442 புள்ளிகள் உயர்ந்து, முதன் முறையாக, 38694.11 புள்ளிகளை எட்டியது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு, 134.85 புள்ளிகள் அதிகரித்து, 11691.95 என்ற புதிய உச்சத்தை தொட்டது. கடந்த ஐந்து மாதங்களுக்கு பின், இரு குறியீடுகளும், ஒரே நாளில் அதிகபட்ச உயர்வைக் கண்டன. இதற்கு முன், ஏப்., 5ல், சென்செக்ஸ் அதிகபட்சம், 577.73 புள்ளிகள்; நிப்டி, 196.75 புள்ளிகள் என்ற அளவில் உயர்வைக் கண்டிருந்தன.
வளர்ச்சி :
நேற்று, வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ், 38736.88 புள்ளிகள் வரை அதிகரித்தது. கடந்த, 23ல், 38487.63 புள்ளிகளை எட்டியதே சாதனையாக இருந்தது. அதுபோல, நிப்டி, வர்த்தகத்தின் நடுவே, முதன் முறையாக, 11700ஐ தாண்டி, 11700.95 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இது, கடந்த, 23ல், அதிகபட்சம், 11620.70 புள்ளிகளாக உயர்ந்திருந்தது. உள்நாட்டில், பொருளாதார வளர்ச்சி அறிகுறிகள், பரவலான பருவ மழை, உணவு தானிய உற்பத்தி குறித்த சாதகமான மதிப்பீடுகள் போன்றவற்றால், பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
உள்நாடு – வெளிநாடு :
கடந்த வாரம், 24ம் தேதி, இறுதியாக நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், உள்நாட்டு நிதி நிறுவனங்கள், அதிக அளவில், பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கின. அன்று, உள்நாட்டு நிதி நிறுவனங்கள், 905 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக, பங்குச் சந்தை வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அதேநாளில், வெளிநாட்டு நிதி நிர்வாக நிறுவனங்கள், நிகர அளவில், 76 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|